சென்னை ஓட்டேரியில் தந்தை அடித்துக்கொலை; மகன் கைது


சென்னை ஓட்டேரியில் தந்தை அடித்துக்கொலை; மகன் கைது
x
தினத்தந்தி 8 Feb 2018 5:11 AM GMT (Updated: 8 Feb 2018 5:11 AM GMT)

சென்னை ஓட்டேரியில் தந்தையை அடித்துக்கொலை செய்து விட்டு, போலீசுக்கு தெரியாமல் உடலை எரிக்க முயன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர்,

சென்னை ஓட்டேரி கொசப்பேட்டை மார்க்கெட் அருகே உள்ள புதுத்தெருவைச் சேர்ந்தவர் அரிகரன் (வயது 60). கூலித்தொழிலாளி. இவருடைய மகன் நரேந்திரன்(31). இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இவர், ரவுடியிசத்திலும் ஈடுபட்டு வந்தார். இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையங்களில் உள்ளன. வேலைக்கு எங்கும் செல்லாமல் அடிக்கடி குடிப்பதற்கு பணம் கேட்டு தந்தை அரிகரனிடம் தகராறு செய்து வருவது வழக்கம் என்று தெரிகிறது.

சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த நரேந்திரன், வீட்டின் மாடிக்கு சென்றார். அங்கிருந்த தனது தந்தை அரிகரனுடன் வழக்கம்போல் தகராறில் ஈடுபட்டார். தந்தை-மகன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த நரேந்திரன், தந்தை என்றும் பாராமல் கையால் சரமாரியாக தாக்கினார். இதில் அரிகரன், கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

அதன்பிறகு மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த நரேந்திரன், வீட்டுக்குள் சென்று படுத்து தூங்கிவிட்டார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோதுதான் தந்தை அரிகரன் இறந்து கிடப்பது தெரிந்தது.

ஆனால் இதுபற்றி உறவினர்கள், போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் அரிகரன் உடலை எரிக்க ஏற்பாடுகள் செய்தார். இதுபற்றி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக இன்ஸ்பெக்டர் முகமதுநாசர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியான அரிகரன் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து நரேந்திரனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர் போலீசிடம் கூறும்போது, “குடிபோதையில் தந்தையிடம் தகராறு செய்தேன். அப்போது ஆத்திரத்தில் கையால் அவரை தாக்கினேன். இதில் அவர் கீழே விழுந்தார். அதன்பின் நான் வீட்டுக்குச்சென்று படுத்து தூங்கி விட்டேன். காலையில்தான் அவர் இறந்து கிடப்பது எனக்கு தெரிந்தது” என்றார்.

இதுபற்றி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.

Next Story