மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்


மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 19 Feb 2018 10:45 PM GMT (Updated: 19 Feb 2018 8:18 PM GMT)

மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில மாநாட்டில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு கடந்த 17-ந் தேதி முதல் தூத்துக்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது. 3-வது நாளான நேற்று பிரதிநிதிகள் மாநாடு நடந்தது.

மாநாட்டுக்கு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன், அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

மாநாட்டில், மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு நேரடியாகவும், மறைமுகமாகவும் குறைக்கப்படுகிறது. நிதி கமிஷன் மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகப்படுத்தினாலும், மத்திய திட்டங்களை மாநில அரசுகள் மீது சுமத்துவதன் மூலம் இந்த அதிகரிப்பு பலனளிக்காமல் போகிறது. திட்ட கமிஷன் கலைப்பில் தொடங்கி, உணவு பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் பொது வினியோக முறை சீர்குலைவு, உதய் மின்திட்டம், ஜி.எஸ்.டி. வரை மாநிலங்களின் உரிமைகள் பலவிதங்களில் வெட்டப்பட்டு உள்ளது. மாநில நிர்வாகங்களில் கவர்னர்களின் தலையீடு அதிகரித்து வருகின்றன. இது கவலை அளிக்கிறது.

பல்வேறு தேசிய இனங்களின் மொழி, பண்பாடு மற்றும் மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது தேசிய ஒற்றுமையுடன் இணைந்த விசயம். எனவே மாநில நலன்களை பாதுகாக்க, மாநில உரிமைகளை வலுப்படுத்த வேண்டும்.

இயற்கை சீற்றங்கள், நவீன தாராளமயமாக்கல், சுற்றுச்சூழல் பாதிப்புகள், இலங்கை கடற்படை தாக்குதல் போன்ற காரணங்களால் தமிழக மீன்பிடி தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்திய கடல் வளத்தை அன்னிய மற்றும் இந்திய கார்பரேட் மீன்பிடி கப்பல் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் வகையில் மத்திய அரசின் கொள்கைகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.

ஒகி புயலில் சிக்கி பலியான மீனவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண நிதியை கேரள அரசு வழங்கியது போல் தமிழகத்தில் வழங்க, அரசு உறுதியளிக்க வேண்டும். மீன்பிடி தடைகால நிவாரணத்தை உயர்த்தி பெண் மீனவர்களுக்கும் சம நிவாரணம் வழங்க வேண்டும். தமிழக அரசு உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்பிடிக்கும் உரிமையை உள்நாட்டு மீனவர்களின் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும். கடல் மீனவர்களுக்கு உரிய அனைத்து சலுகைகளும் உள்நாட்டு மீனவர்களுக்கும் வழங்க வேண்டும்.

தமிழகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் போன்ற மத்திய அரசு திட்டங்களின் அமலாக்க பணிகளில் லட்சக்கணக்கானோர் பணியாற்றுகிறார்கள். இதில் பெண்களே அதிகம். இதில் பலர் 10 ஆண்டு முதல் 35 ஆண்டு வரை பணியாற்றி வந்தாலும் அவர்கள் தொழிலாளர்களாக அங்கீகரிக்கப்படவில்லை. இவர்களுக்கு ஊதியம் என்ற பெயரில் 6 மாதங்களுக்கு ஒரு முறை, ஆண்டுக்கு ஒரு முறை என்று சிறிய தொகை வழங்கப்படுகிறது.

எனவே அரசு திட்டப்பணியாளர்கள் அனைவரும் தொழிலாளர்கள் என அங்கீகரிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் வழங்க மத்திய- மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் வாழும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள், தொடர்ந்து ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் இன சான்றிதழ் கிடைக்காமல் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இதனால் அவர்கள் உயர் கல்வி, வேலை வாய்ப்பை இழக்கிறார்கள். மெய் தன்மை அறிதல் என்ற பெயரில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பழங்குடி மக்கள், ஆண்டு கணக்கில் விசாரணைக்காக காத்திருக்கும் நிலை இருக்கிறது. பழங்குடி பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வேட்டைக்காரன் இனத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும். இவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் தனி கவனம் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story