கொடுவாய் அருகே பஸ்கள் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலி


கொடுவாய் அருகே பஸ்கள் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலி
x
தினத்தந்தி 19 Feb 2018 9:45 PM GMT (Updated: 19 Feb 2018 8:28 PM GMT)

கொடுவாய் அருகே பஸ்கள் மோதிய விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதில் 29 பேர் காயம் அடைந்தனர்.

காங்கேயம்,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருப்பூர் நோக்கி நேற்று ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் தாராபுரம்-திருப்பூர் சாலையில் கொடுவாய் அருகே சக்திவிநாயகபுரம் பகுதியில் நேற்று காலை 10.45 மணிக்கு வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிரே ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து தாராபுரம் நோக்கி மற்றொரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது.

அப்போது கண் இமைக்கும் நேரத்தில் 2 பஸ்களும் பக்கவாட்டில் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பஸ்சின் பக்கவாட்டு பகுதி பலத்த சேதம் அடைந்தது. அப்போது 2 பஸ்களிலும் பயணம் செய்த பயணிகள், “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்“ என அபயக்குரல் எழுப்பினார்கள். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும், ஊதியூர் போலீசாரும் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் சத்தியமங்கலத்தில் இருந்து தாராபுரம் நோக்கி வந்த பஸ்சில் பயணம் செய்த திண்டுக்கல் மாவட்டம் மாவட்டம் நெய்க்காரபட்டியை சேர்ந்த மணி என்பவரின் மனைவி சாந்தாமணியும் (50), அதே பஸ்சில் பயணம் செய்த 50 வயது மதிக்க மற்றொரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இறந்த பெண் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்த விபத்தில் சத்தியமங்கலத்தில் இருந்து தாராபுரம் வந்த பஸ்சின் டிரைவர் கார்த்தி (25), நடத்துனர் கார்த்தி (22), ஓட்டன் சத்திரத்தில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் டிரைவர் லட்சுமணன் (32), நடத்துனர் கார்த்திகேயன் (36) மற்றும் 2 பஸ்களிலும் பயணம் செய்த முருகேஸ்வரி(24), தாராபுரத்தை சேர்ந்த வசந்தகுமார் (33), வஞ்சிப்பாளையத்தை சேர்ந்த சிபி (23), மங்கலத்தை சேர்ந்த முருகேசன் (38), அவருடைய மனைவி கவிதா (39), இவர்களுடைய மகள் கவுசல்யா.

விஜயாபுரத்தை சேர்ந்த ஜாகிர்உசேன் (24), முருகம்பாளையத்தை சேர்ந்த ராதா (30), தாராபுரத்தை சேர்ந்த லட்சுமி (45), ஆராயா (47), பாப்பா (50), ஜெயலெட்சுமி (34), தேனி மாவட்டம் வடுகப்பட்டியை சேர்ந்த பாலையா (74), திருப்பூர் காலேஜ்ரோட்டை சேர்ந்த பேச்சியம்மாள் (70), ஈரோடு மூலக்கிணறை சேர்ந்த செல்வி (35), அலங்கியத்தை சேர்ந்த நீலவேணி (28), ஸ்ரீவர்சன் (9), பல்லடத்தை சேர்ந்த கவுசல்யா (23), திருப்பூரை சேர்ந்த பவுன்மணி (42), கோமதி (34), பழனியை சேர்ந்த காளிஸ்வரி (23), கொடுவாயை சேர்ந்த ஜனனி (6), லட்சுமி (38), காங்கேயத்தை சேர்ந்த குப்புசாமி (40), தாயம்பாளையத்தை சேர்ந்த லட்சுமி (60) ஆகிய 29 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதில் பேச்சியம்மாள், செல்வி, பவுன்மணி ஆகியோர் மட்டும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த விபத்து குறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விபத்தில் பலியான சாந்தாமணி, பொங்கலூரில் நடந்த உறவினர் ஒருவரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். பின்னர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, கொடுவாயில் இருந்து தாராபுரம் நோக்கி சென்ற பஸ்சில் ஏறி உள்ளார். பஸ்சில் ஏறிய சிறிது நேரத்தில் இந்த விபத்து நடந்து உள்ளது. 

Next Story