வேடசந்தூர் அருகே வீட்டில் பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்


வேடசந்தூர் அருகே வீட்டில் பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்
x
தினத்தந்தி 19 Feb 2018 9:30 PM GMT (Updated: 19 Feb 2018 8:38 PM GMT)

வேடசந்தூர் அருகே பெண்ணுக்கு வீட்டில் வைத்து ஆம்புலன்ஸ் ஊழியர் பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

வேடசந்தூர்,

திருவாரூர் மாவட்டம் இடையார் நத்தத்தை சேர்ந்தவர் வினோத். இவர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள விட்டல்நாயக்கன்பட்டியில் ஒரு தனியார் மில்லில் தங்கியிருந்து சமையல் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி வெண்ணிலா (வயது 20). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த வெண்ணிலாவுக்கு, நேற்று அதிகாலை பிரசவவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 108 ஆம்புலன்சுக்கு வினோத் தகவல் கொடுத்தார். அதன்பேரில் வேடசந்தூரில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனமும் அங்கு விரைந்து வந்தது. இருப்பினும் வெண்ணிலாவுக்கு பிரசவ வலி அதிகமானதால் அலறி துடித்தார்.

ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், அவருக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்யப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர் மகேஷ்வரி அவருக்கு பிரசவம் பார்த்தார். அப்போது வெண்ணிலாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் சிகிச்சைக்காக தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அங்கு அவர்கள் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பெண்ணுக்கு வீட்டில் பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியரை அனைவரும் பாராட்டினர். 

Next Story