ரூ.1 கோடியில் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டும் பணி முதன்மை நீதிபதி அடிக்கல் நாட்டினர்


ரூ.1 கோடியில் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டும் பணி முதன்மை நீதிபதி அடிக்கல் நாட்டினர்
x
தினத்தந்தி 19 Feb 2018 10:45 PM GMT (Updated: 19 Feb 2018 9:10 PM GMT)

போளூரில் ரூ.1 கோடி மதிப்பில் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டும் பணி நடக்கிறது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

போளூர்,

போளூரில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 1961-ம் ஆண்டு கட்டப்பட்டது. தொடர்ந்து இந்த பழமையான கட்டிடத்தில் கோர்ட்டு இயங்கி வருகிறது. மேலும் மாவட்ட உரிமையியல் கோர்ட்டு வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் போளூர் பங்களாமேடு முருகாபாடியில் நீதிபதிகள் குடியிருப்பு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், தீயணைப்பு துறை, கிளைச் சிறைச்சாலை, தோட்டக் கலைத்துறை அலுவலகம், வனத்துறை அலுவலகம், வணிகவரித்துறை அலுவலகம் ஆகியவை கட்ட தமிழக அரசு இடம் ஒதுக்கி உள்ளது.

இந்த நிலையில் நேற்று ரூ.1 கோடியே 1 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பில் நீதிபதிகளுக்கான 2 குடியிருப்புகள் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

பின்னர் கலெக்டர் பேசுகையில், ‘அரசு அலுவலர்கள் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பணிமாற்றமாக வர தயங்குகிறார்கள். இந்த மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் குறைவு என்று கூறுகின்றனர். இனி இந்த மாவட்டம் வசதிகள் குறைவின்றி, நிறைவாக செய்யப்படும்’ என்றார்.

மாவட்ட முதன்மை நீதிபதி பேசுகையில், ‘ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைய உள்ள இந்த இடம் அமைதியான இயற்கை சூழலில் உள்ளது. இந்த இடம் பல தடைகளை தாண்டி கலெக்டர் கந்தசாமியின் பெரும் முயற்சியில் வந்து உள்ளது பாராட்டுக்கு உரியது. இந்த இடம் எதிர்காலத்தில் ஒரு துணை நகரமாக மாறும் என்பது உறுதி’ என்றார்.

இதில் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி நாராஜா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான ராஜ்மோகன், உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, போளூர் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெகன்நாதன், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தாமோதரன், தாசில்தார் பாலாஜி, வக்கீல் சங்க தலைவர் சசிகுமார், செயலாளர் நாகராஜன், வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் அண்ணாமலை, அ.தி.மு.க. நிர்வாகிகள் கணேசன், அபிராமி, ஏழுமலை மற்றும் வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Next Story