காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2018 10:45 PM GMT (Updated: 19 Feb 2018 9:10 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.

திருச்சி,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், நதிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு, தமிழ்மாநில காங்கிரஸ் விவசாய பிரிவு மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் காவிரி நதிநீர் பங்கீட்டில் உச்சநீதிமன்ற தீர்ப்பால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பழைய கலெக்டர் அலுவலகம் அருகே விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் இந்திரஜித், மாவட்ட தலைவர் அயிலை சிவசூரியன், த.மா.கா.விவசாய பிரிவு மாநில தலைவர் புலியூர் நாகராஜன், மாவட்ட தலைவர் புங்கனூர் செல்வம், கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் விவசாயிகள் கோஷமிட்டபடி ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்துக்குள் புகுந்து நுழைவுவாயில் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தொடர்ந்து கலெக்டர் ராஜாமணியை சந்தித்து கோரிக்கை தொடர்பாக மனு அளித்தனர்.

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தை தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் நேற்று முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மாநில தலைவர் விசுவநாதன் கூறுகையில், “உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்காத கர்நாடக முதல்-மந்திரியை கண்டிக்கிறோம். லால்குடி பெருவளவாய்க்கால், திருவெறும்பூர் கட்டளைமேட்டு வாய்க்காலில் தண்ணீர் வராததால் திருவெறும்பூர், துவாக்குடி, அசூர், பழங்கனாங்குடி, பெருவளநல்லூர், சங்கேந்தி, வெள்ளனூர் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பயிர்களை காப்பாற்ற மாயனூர் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்துகிறோம்” என்றார். இதனை தொடர்ந்து அவர்களிடம் தலைமை பொறியாளர் செந்தில்குமார், துணை தலைமை பொறியாளர் ராதாகிருஷ்ணன், கண்காணிப்பு பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, விவசாயிகள் கோரிக்கை மனுவை அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story