கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்


கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 19 Feb 2018 10:30 PM GMT (Updated: 19 Feb 2018 9:27 PM GMT)

வெண்ணந்தூர் அருகே கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை தடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் பள்ளி மாணவிகளுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நாமக்கல்,

வெண்ணந்தூர் அருகே உள்ள சவுரிபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று பள்ளி மாணவிகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

சவுரிபாளையம் கிராமத்தில் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்த கிராமத்தில் இருந்து அருகில் உள்ள வெண்ணந்தூருக்கு சுமார் 30 குழந்தைகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

பள்ளிக்கு செல்லும் வழியில் கோவில் சுற்றுச்சுவர் அருகே கள்ளத்தனமாக மது விற்கப்படுகிறது. இதை குடிக்க வருபவர்கள் பள்ளிக்கு சென்று வரும் மாணவிகளிடம் அத்துமீறுகின்றனர். இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே கோவில் அருகில் கள்ளத்தனமாக நடைபெறும் மதுவிற்பனையை தடுக்க வேண்டும். மேலும் மாணவிகளிடம் அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து குழந்தைகள் தொடந்து படிக்க உதவ வேண்டும்.

இதேபோல் அகில இந்திய இந்து மகாசபா அமைப்பினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ராசிபுரம் தாலுகா மங்களபுரம் கிராமத்தில் உள்ள நாரைக்கிணறு மலைப்பகுதியில் அண்ணாநகர் ஏரி முதல் நாவலடி ஊத்து ஏரி வரையிலான நீர்வழிப்பாதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 30 முதல் 40 மீட்டர் அகலம் வரை இருந்தது. ஆனால் ஆக்கிரமிப்புகளால் தற்போது 5 மீட்டர் அளவுக்கு இந்த நீர்வழிப்பாதை சுருங்கிவிட்டது. இந்த நீர்வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, ஏரிக்கு தங்கு தடையின்றி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Next Story