ரூ.12 லட்சம் கோடிக்கு முதலீடுகளை திரட்ட இலக்கு முதல்-மந்திரி பட்னாவிஸ் தகவல்


ரூ.12 லட்சம் கோடிக்கு முதலீடுகளை திரட்ட இலக்கு முதல்-மந்திரி பட்னாவிஸ் தகவல்
x
தினத்தந்தி 19 Feb 2018 11:44 PM GMT (Updated: 19 Feb 2018 11:44 PM GMT)

மும்பையில் நடந்து வரும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ. 12 லட்சம் கோடிக்கு முதலீடுகளை திரட்ட இலக்கு நிர்ணயித்து இருப்பதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

மும்பை,

மராட்டியத்தில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான உலக முதலீட்டாளர் மாநாட்டை மாநில அரசு நடத்துகிறது. இந்த மாநாட்டை நேற்று முன்தினம் பிரதமர் மோடி மும்பையில் தொடங்கி வைத்தார். இந்த மாநாடு நேற்று 2-வது நாளாக நடைபெற்றது. பல்வேறு நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர். நேற்று பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த நிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தற்போதைய நிலையில் சுமார் ரூ.10 லட்சம் கோடி முதல் ரூ. 12 லட்சம் கோடி வரை முதலீடுகள் கையெழுத்தாகும் என நம்புகிறோம். இதனை இலக்காக வைத்து உள்ளோம். 2 நாட்களுக்குள் அரசு 2 ஆயிரத்திற்கும் அதிகமான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம்.

விமானத்துறை, மின்சார வாகன உற்பத்தி மற்றும் சேவை துறைகளில் பல்வேறு முதலீடுகள் வந்துகொண்டிருக்கின்றன. நாக்பூர், அகமதுநகர், புனே, நாசிக் மற்றும் அவுரங்காபாத் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு துறை நிறுவனங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முதலீட்டாளர் மாநாடு நடந்த முதல் நாளிலேயே ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி அடுத்த 10 ஆண்டிற்குள் நாட்டில் முதல் டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்க ரூ. 60 ஆயிரம் கோடிக்கு முதலீட்டை அறிவித்திருந்தார். அதேபோல் துபாயை சேர்ந்த நிறுவனம் ஒன்று ரூ. 700 கோடிக்கு மும்பை- நாக்பூர் எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. மேலும் மகேந்திரா நிறுவனம் மும்பை மற்றும் நாக்பூரில் ரூ. 2 ஆயிரத்து 300 கோடிக்கு 3 புதிய திட்டங்களில் முதலீடு செய்ய உள்ளது.

Next Story