பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 Feb 2018 12:14 AM GMT (Updated: 20 Feb 2018 12:14 AM GMT)

ஊத்துக்கோட்டையில் பட்டதாரி பெண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 3 நாட்களுக்கு பின்னர் கதவை உடைத்து அவரது உடலை போலீசார் மீட்டனர்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டையை சேர்ந்தவர் புனிதா (வயது 40). பட்டதாரி பெண். இவருக்கும் கன்னியாகுமரியை சேர்ந்த வினோத்ராஜ் என்பவருக்கும் கடந்த 2009-ல் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த பிறகு இருவரும் ஊத்துக்கோட்டையில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் இருவரும் கடந்த 2013-ம் வருடம் கோர்ட்டு மூலம் விவாகரத்து பெற்றனர்.

பின்பு வினோத்ராஜ் வேறு பெண்ணுடன் திருமணம் செய்துகொண்டு திருவள்ளூர் அருகே உள்ள செவ்வாய்பேட்டைக்கு சென்றுவிட்டார். ஊத்துக்கோட்டையில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த புனிதா அங்கு உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

கணவர் விவாகரத்து செய்து வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டது புனிதாவுக்கு மன வேதனை அளித்தது. இதனால் பள்ளிக்கு சரிவர செல்லாததால் பள்ளி நிர்வாகம் அவரை பணியிலிருந்து 4 மாதங்களுக்கு முன் நீக்கிவிட்டது. இதனால் மேலும் மிகவும் விரக்தியுடன் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி அன்று காலை வீட்டின் எதிரே உள்ள தெரு குழாயடியில் தண்ணீர் பிடித்த அவர் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் பேசினார். அதன்பிறகு அவர் வெளியே வரவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று ஊத்துக்கோட்டை பேரூராட்சி ஊழியர்கள் தண்ணீர் வரி வசூலிக்க புனிதாவின் வீட்டுக்கு சென்றனர். ஆனால் கதவு பூட்டி இருந்தது.

மேலும், துர்நாற்றம் வீசியதால் சந்தேகத்தின் பேரில் ஊழியர்கள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது புனிதா மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி ஊத்துக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து புனிதா உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சுமார் 3 நாட்களுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டதால் அழுகிய நிலையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். புனிதா தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story