சுடு தண்ணீர் தரும் பலன்கள்


சுடு தண்ணீர் தரும் பலன்கள்
x
தினத்தந்தி 21 Feb 2018 7:55 AM GMT (Updated: 21 Feb 2018 7:55 AM GMT)

நம்மில் பலரும் நோய் வந்தால் மட்டுமே தண்ணீரை காய்ச்சி பருகும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறோம். ஆனால் தினமும் தண்ணீரை காய்ச்சி பருகி வந்தால் கிடைக்கும் பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

டல் எடையை குறைக்க வேண்டும் என்று முயற்சிப் பவர்கள் தினமும் காலையில் சுடு தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறை கலந்து பருகி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். அளவுக்கு அதிகமாக உணவு, எண்ணெய் பலகாரம், இனிப்பு போன்றவை சாப்பிட்டால் சில நேரங்களில் நெஞ்சு எரிச்சல் தொடங்கும். அப்போது ஒரு டம்ளர் சுடு தண்ணீரை எடுத்து பருகினால் கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போய் விடும், உணவும் செரிமானம் ஆகி விடும்.

மேலும் தினமும் காலையில் எழுந்தவுடன் சுடு தண்ணீர் பருகினால் மலச்சிக்கல் தீரும். இரவு தூங்குவதற்கு முன் பருகினால் புளித்த ஏப்பம், வாயுப்பிடிப்பு ஆகியவை நீங்கிவிடும்.

சுடு தண்ணீரில் சுக்கு, மிளகு, பனங்கற்கண்டு, சீரகம் ஆகியவை போட்டு குடித்து வந்தால் உடலில் உள்ள பித்தம் கணிசமாக குறையும். குறிப்பாக சளி, இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்பட்டால், சுடு தண்ணீரே சிறந்த மருந்தாக செயல்படுகிறது. மேலும் சுடு தண்ணீர் பருகுவதால் உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியேறும். அதனுடன் சேர்ந்து உடலில் உள்ள நச்சுகளும் வெளியேறி உடல் சுத்தமாகும்.

சுடு தண்ணீர் பருகுவது முடி உதிர்வை குறைத்து முடியின் வளர்ச்சிக்கு உதவி செய்யும். தலையில் உள்ள பொடுகையும் கட்டுப்படுத்தும். முக்கியமாக, சுடு தண்ணீர் பருகுவதால் உடலில் ரத்த ஓட்டம் சீராகும்.

இதன் மூலம் நரம்பு மண்டலங்களின் செயல்பாடு மேம்படும். சுடு தண்ணீர் அருந்துவதன் மூலம் உடலில் நச்சுகள் வெளியேறுவதால் வயதின் காரணமாக ஏற்படும் முதிர்ச்சி தள்ளிப் போடப்படும். எனவே தினமும் சுடுதண்ணீர் பருகுங்கள், உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள். 

Next Story