சூப்பர் மார்க்கெட்டில் நெய் பாட்டில்களை திருடிய 2 பெண்கள் கைது


சூப்பர் மார்க்கெட்டில் நெய் பாட்டில்களை திருடிய 2 பெண்கள் கைது
x
தினத்தந்தி 22 Feb 2018 10:30 PM GMT (Updated: 22 Feb 2018 6:58 PM GMT)

விருகம்பாக்கத்தில் சூப்பர் மார்க்கெட்டில் நெய் பாட்டில்களை திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். உள்ளாடைக்குள் ரகசியமாக பையை வைத்து இந்த நூதன திருட்டில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

சென்னை விருகம்பாக்கம் சாய் நகர், காளியம்மன் கோவில் தெருவில் தனியாருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் ஒன்று உள்ளது. இங்கு மளிகை சாமான்கள் மற்றும் காய்கறிகள் விற்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்த 2 பெண்கள், பொருட்கள் வாங்குவது போல் சுற்றி, சுற்றி வந்தனர். அவர்களை சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்தனர்.

அப்போது இருவரும் அங்கு அடுக்கி வைக்கப்பட்டு இருந்த நெய் பாட்டில்களை திருடி, தங்களது கால்களுக்கு இடையே புடவைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அந்த 2 பெண்களையும் கையும், களவுமாக பிடித்தனர். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், 2 பெண்களையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அதில் அவர்கள் இருவரும், மதுரையை சேர்ந்த லதா(வயது 41), ராணி (50) என்பதும், இருவரும் மதுரையில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வந்து அங்குள்ள மறைவான இடத்துக்கு சென்று, உள்ளாடைக்குள் ரகசியமாக பெரிய அளவில் பை ஒன்றை வைத்துக்கொண்டு ஒவ்வொரு சூப்பர் மார்க்கெட்டாக நோட்டமிட்டு சென்று சிறிய, பெரிய அளவிலான நெய் பாட்டில்களை திருடி, அந்த பையில் போட்டு எடுத்துச்சென்று விடுவார்கள். பின்னர் அதனை சிறிய கடைகளில் மொத்தமாக கொண்டு சென்று விற்று விடுவார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு விருகம்பாக்கம் அருணாச்சலம் மெயின்ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிலும் இதேபோல் நூதனமுறையில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள நெய் பாட்டில்களை திருடியதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து லதா, ராணி இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் இவர்களின் கூட்டாளிகள் வேறு யாராவது உள்ளார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story