பாதாள மின் கேபிள் பதிக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்


பாதாள மின் கேபிள் பதிக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்
x
தினத்தந்தி 25 Feb 2018 10:00 PM GMT (Updated: 25 Feb 2018 8:49 PM GMT)

ஈரோடு மாநகராட்சியில் பாதாள மின்கேபிள் பதிக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று அதிகாரி தெரிவித்து உள்ளார்.

ஈரோடு,

தமிழகத்தில் மின் கம்பிகள் மூலமாக செல்லும் மின்சாரத்தில் ஏற்படும் மின் இழப்பை தடுக்கவும், தடையில்லாமல் மின்வினியோகத்தை செய்யவும் பாதாள மின் கேபிள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் முதல் கட்டமாக பாதாள மின்கேபிள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஈரோடு சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம், பெரியசேமூர், காசிபாளையம், பி.பி.அக்ரஹாரம், சூரியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 135 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மின் அழுத்த கேபிள் பதிக்கவும், 630 கிலோ மீட்டருக்கு குறைந்த மின் அழுத்த கேபிள் பதிக்கவும் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.

இந்த பணிகளுக்கு தேவையான மின் கேபிள்கள் ஈரோடு ஈ.வி.என்.ரோட்டில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாதாள மின் கேபிள் பதிப்பதற்கான திட்டத்தில் ஈரோடு மாநகராட்சி கடந்த 2010-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டது.

இதற்காக ரூ.216 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் ரூ.70 கோடி மதிப்பிலான மின்கேபிள் பதிக்கப்பட உள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும்”, என்றார்.

Next Story