காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும் அமைச்சர் காமராஜ் உறுதி


காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும் அமைச்சர் காமராஜ் உறுதி
x
தினத்தந்தி 25 Feb 2018 10:45 PM GMT (Updated: 25 Feb 2018 9:07 PM GMT)

அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி திருவாரூர் வன்மீகபுரம் அம்மா அரங்கில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 79 ஜோடிகளுக்கு திருமணம் இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

விழாவிற்கு மாவட்ட செயலாளரும், உணவுத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் தலைமை தாங்குகிறார். எம்.பி.க்கள் டாக்டர் கே.கோபால், கு.பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அப்போது மணமக்களுக்கு தங்க தாலி, குத்துவிளக்கு, கட்டில், மெத்தை, பீரோ, மின்விசிறி, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட 70 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இதற்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விழா அரங்கை அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அம்மா ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரிடம் வலியுறுத்தி பேசினார். பிறந்த நாள் விழாவிலும் விவசாயத்தை பாதுகாத்திட முதல்-அமைச்சர் வலியுறுத்தியதற்கு காவிரி டெல்டா விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நடவடிக்கை

அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் நிச்சயமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். கடைசியாக சாகுபடி மேற்கொண்ட விவசாயிகள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். தண்ணீர்் பெறுவதற்கான ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் மேற்கொண்டு வருகிறார். இதனால் வருங்காலங்களில் இதுபோன்ற சிக்கல்கள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடைகளில் இம்மாதம் முதல் மைசூர் பருப்பு நிறுத்தப்பட்டு, துவரம் பருப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story