தஞ்சை அருகே எச்சில் துப்பிய தகராறில் பெண் அரிவாளால் வெட்டிக்கொலை 2 பேர் கைது


தஞ்சை அருகே எச்சில் துப்பிய தகராறில் பெண் அரிவாளால் வெட்டிக்கொலை 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Feb 2018 10:15 PM GMT (Updated: 25 Feb 2018 9:07 PM GMT)

தஞ்சை அருகே எச்சில் துப்பிய தகராறில் பெண் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த மணல்மேடு மேலத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மனைவி இந்திராகாந்தி(வயது 50). கூலி தொழிலாளர்கள். இவர்களுடைய மகன் சதீஷ்கண்ணன். இவர் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் அமர்ந்து இருந்தார்.

அப்போது சதீஷ்கண்ணன் எச்சில் துப்பினார். அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த மணல்மேடு ஓடக்கரைத்தெருவை சேர்ந்த சுரேஷ்(35) மீது சதீஷ்கண்ணன் துப்பிய எச்சில் பட்டது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு இருந்த சிலர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

அரிவாளால் வெட்டினர்

இதையடுத்து சுரேஷ் அங்கிருந்து சென்று தனது உறவினர்களான சேகர்(40), பன்னீர்செல்வம் ஆகியோரிடம் இது குறித்து கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், அரிவாள் மற்றும் இரும்பு கம்பிகளை எடுத்துக்கொண்டு மேலும் 2 பேரை அழைத்துக்கொண்டு சதீஷ்கண்ணனின் வீட்டிற்கு சென்றனர். அப்போது சதீஷ்கண்ணன் வீட்டில் இல்லை. அவருடைய தாயார் இந்திராகாந்தி, தந்தை கோவிந்தராஜ், பாட்டி சாம்பலம்மாள் ஆகியோர் இருந்தனர். அவர்களுடன் சுரேஷ் தரப்பினர் தகராறு செய்தனர். மேலும் ஆத்திரம் அடைந்த அவர்கள், இந்திராகாந்தியை அரிவாளால் வெட்டினர். மேலும் கோவிந்தராஜ், சாம்பலம்மாள் ஆகியோரையும் தாக்கினர்.

பரிதாப சாவு

இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே இந்திராகாந்தி பரிதாபமாக இறந்தார். கோவிந்தராஜ், சாம்பலம்மாள் ஆகிய 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார், சுரேஷ், சேகர், பன்னீர்செல்வம் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சுரேஷ், சேகர் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story