வாடிக்கையாளர்களின் போன் அழைப்பு விவரங்களை திருடிய வழக்கில் 2 நடிகர்களுக்கு தொடர்பு


வாடிக்கையாளர்களின் போன் அழைப்பு விவரங்களை திருடிய வழக்கில் 2 நடிகர்களுக்கு தொடர்பு
x

வாடிக்கையாளர்களின் போன் அழைப்பு விவரங்களை திருடிய வழக்கில் 2 நடிகர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

மும்பை,

தானே கல்வாவில் உரிய அனுமதி பெறாமல் துப்பறியும் நிறுவனம் நடத்தி வந்த முகேஷ், பிரசாந்த், ஜிகர், சாம்ரேஷ் ஆகிய 4 பேரை தானே குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து இருந்தனர். விசாரணையில், அவர்கள் தங்களது வாடிக்கையாளர்களின் போன் அழைப்பு விவரங்களை திருடி ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்து இருந்தது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து சில வாடிக்கையாளரது போன் அழைப்பு விவரங்களை மும்பை மாகிமை சேர்ந்த பெண் துப்பறிவாளர் ரஞ்சனி பண்டித் என்பவர் ரூ.15 ஆயிரத்துக்கு வாங்கியிருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவரையும் அதிரடியாக கைது செய்தனர்.

இதுதவிர வாடிக்கையாளர்களின் போன் அழைப்பு விவரங்களை தொலைத்தொடர்பு நிறுவனம், போலீஸ் அலுவலகங்களில் இருந்து திருடியதாகவும் அஜின்கியா, ஜஸ்பிரித்சிங் ஆகிய இருவர் சிக்கினார்கள். மேற்படி கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், பிரபல இந்தி நடிகர்கள் இருவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இருப்பினும் அவர்களது பெயரை போலீசார் கூற மறுத்துவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விரைவில் நடிகர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story