ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 7 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்


ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 7 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
x
தினத்தந்தி 26 Feb 2018 10:45 PM GMT (Updated: 26 Feb 2018 5:25 PM GMT)

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 7 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை விஜயகுமார் எம்.பி. அணிவித்தார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 70–வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஏழை–எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம் போன்றவை நடத்தப்பட்டது. இதன் ஒருபகுதியாக, ஜெயலலிதா பிறந்தநாள் அன்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிறந்த 7 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

இதற்கு குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் விஜயகுமார் எம்.பி. தலைமை தாங்கி குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட மீனவ கூட்டுறவு இணையத்தலைவர் சகாயம், அம்மா பேரவை மாவட்ட தலைவர் கனகராஜ், நகர இலக்கிய அணி செயலாளர் சதானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விஜயகுமார் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அ.தி.மு.க.வில் உறுப்பினராக உள்ளவர்கள் தங்கள் பதிவை புதுப்பிக்கவும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்ப படிவங்கள் 29–1–2018 முதல் தலைமை கழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அதில் கேட்கப்பட்டுள்ள முழு விவரங்களை தமிழில் தெளிவாக பூர்த்தி செய்து உறுப்பினராக சேருவோர் ஒவ்வொருவரும் கையொப்பமிட வேண்டிய இடத்தில் கையொப்பத்தை கண்டிப்பாக இடவேண்டும்.

குமரி மாவட்டத்தில் அ.தி.மு.க.வில் உறுப்பினராக உள்ளவர்கள் தங்கள் பதிவுகளை புதுப்பித்துக் கொள்ள மாவட்ட அலுவலகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான உறுப்பினர் படிவங்களை பெற்றுச் சென்றுள்ளனர். விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்–அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்–அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி கட்சி விதிகளுக்கு உட்பட்டு வார்டு மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகிய யாரேனும் ஒருவரின் கையொப்பம்  அவசியம் பெற வேண்டும். அதன்பிறகு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை குமரி மாவட்ட செயலாளர் ஆய்வு செய்து, மாவட்ட செயலாளர் முத்திரையிட்டு, அவருடைய கையொப்பம் பெற வேண்டும். அவ்வாறு கையொப்பம் பெறப்பட்ட விண்ணப்பங்களே தலைமைக்கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு விஜயகுமார் எம்.பி. கூறியுள்ளார்.


Next Story