பஞ்சாப் நேஷனல் வங்கி அருகே இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்


பஞ்சாப் நேஷனல் வங்கி அருகே இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2018 10:00 PM GMT (Updated: 26 Feb 2018 5:39 PM GMT)

சென்னை திருவல்லிக்கேணி அருகே தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி சிங்காராச்சாரி தெருவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி அருகே தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாவட்ட தலைவர் சிவராஜசேகரன், கலைப்பிரிவு மாவட்ட தலைவர் பிரபு, செய்தி தொடர்பாளர் துறைமுகம் ரவிராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது ஹரிகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், “ஏழைகள், விவசாயிகள் கடன் கேட்டு வங்கிக்கு சென்றால் விரட்டியடிக்கப்படுகிறார்கள். ஆனால் வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்து தலைமறைவு ஆகியுள்ளார். வங்கியின் அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். இதனை கண்டிக்கும் விதமாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் ஆரூண் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சமீபத்தில் தைவான் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன், நிரவ் மோடி எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகி இருக்கிறது. எனவே மத்திய பா.ஜ.க. அரசும் நிரவ் மோடிக்கு உடந்தையாக இருப்பது தெரியவந்துள்ளது” என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story