காளான் வளர்ப்பு பண்ணை அமைக்க அனுமதி தர வேண்டும்


காளான் வளர்ப்பு பண்ணை அமைக்க அனுமதி தர வேண்டும்
x
தினத்தந்தி 26 Feb 2018 10:15 PM GMT (Updated: 26 Feb 2018 6:01 PM GMT)

துரிஞ்சாபுரம் ஒன்றியம் முத்தரசம்பூண்டி கிராமத்தில் காளான் வளர்ப்பு பண்ணை அமைக்க அனுமதி தர வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்களிடமும், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகளிடமும் கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இதில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ரேஷன் அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 400-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் இதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக அதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கூட்டத்தில் திருவண்ணாமலை தாலுகா துரிஞ்சாபுரம் ஒன்றியம் முத்தரசம் பூண்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த முத்தரசம்பூண்டி ஊராட்சியில் வசித்து வருகிறோம். இந்த ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. எங்களிடம் காளான் வளர்ப்பு பண்ணை அமைக்க தேவையான இட வசதி உள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு பண்ணை அமைக்க அனுமதி பெற்ற தர வேண்டும்.

Next Story