மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் போராட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் போராட்டம்
x
தினத்தந்தி 8 March 2018 10:30 PM GMT (Updated: 8 March 2018 6:52 PM GMT)

லெனின் மற்றும் பெரியார் சிலைகளை சேதப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள சுதந்திரதின பூங்கா முன்பு நேற்று போராட்டம் நடைபெற்றது.

சென்னை,

போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழக துணை தலைவர் கலி.பூங்குன்றன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திரிபுராவில் லெனின் சிலை சேதப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று கருத்து தெரிவித்த எச்.ராஜாவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டம் முடிந்த சிறிது நேரத்தில் வள்ளுவர் கோட்டம் சுதந்திர தின பூங்கா எதிரே உள்ள சாலையில் எச்.ராஜாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் எரிந்து கொண்டு இருந்த தீயை அணைத்து, அதில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முற்பட்டனர்.

இதில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து உருவ பொம்மையை எரித்ததாக சிலரை போலீசார் கைது செய்து, வேனில் அழைத்துச்சென்றனர்.

Next Story