கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 8 March 2018 10:15 PM GMT (Updated: 8 March 2018 7:08 PM GMT)

குழந்தை இல்லாத ஏக்கத்தில் கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பூந்தமல்லி,

மதுரவாயல் சீமாத்தம்மன் நகர், நேரு தெருவைச் சேர்ந்தவர் ரேணு(வயது 26). கார் டிரைவர். இவருடைய மனைவி விஜி(26). நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ரேணு, தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவருடைய மனைவி, அறைக்குள் சென்று பார்த்தார். அங்கு ரேணு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியில் அலறினார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார், ரேணு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், ரேணு-விஜி தம்பதிக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என கூறப்படுகிறது. குழந்தை இல்லாத ஏக்கத்தில் நேற்று முன்தினம் இரவு குடித்து விட்டு வீட்டுக்கு வந்த ரேணு, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதல் கட்டவிசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

எனினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? எனவும் மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரவாயல் எம்.எம்.டி.ஏ. காலனி 7-வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார்(44). இவர், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டைதூக்கும் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி தனலட்சுமி(38). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக ராம்குமாருக்கும், அவருடைய மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு எற்பட்டது.

இதில் மனமுடைந்த ராம்குமார், வீட்டில் உள்ள அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story