போலீசாரால் தேடப்பட்டு வந்த 4 பேர் திண்டிவனம் கோர்ட்டில் சரண்


போலீசாரால் தேடப்பட்டு வந்த 4 பேர் திண்டிவனம் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 8 March 2018 11:41 PM GMT (Updated: 8 March 2018 11:41 PM GMT)

புதுவையில் காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் 3 பேர் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் திண்டிவனம் கோர்ட்டில் சரணடைந்தனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுச்சேரி வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மாறன் (வயது55). காங்கிரஸ் பிரமுகரான இவர் புதுவை அரசு மருத்துவமனை அருகே சொந்தமாக ஆம்புலன்ஸ் வாகனங்களை வைத்து தொழில் செய்து வந்தார். இவர் 6-ந் தேதி இரவு நடைபயிற்சியை முடித்துவிட்டு அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள பகுதியில் ஆம்புலன்சின் அருகில் அமர்ந்திருந்தார்.

அப்போது அங்கு வீச்சு அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கும்பல் ஒன்று மாறனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே மாறன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் பெரியகடை போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக பெரியகடை போலீசார் விசாரணை நடத்தி வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்த மூர்த்தி, அவருடைய மனைவி திலகா உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த வழக்கில் தலைமறைவானவர்களை பிடிக்க பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், முத்தியால்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் முத்து குமரன், சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இந்தநிலையில் மாறனை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யும் வரை அவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று முன் தினம் ஆம்பூர்-செஞ்சி சாலையில் மறியல் செய்தனர். தொடர்ந்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினார்கள். கவர்னர் கிரண்பெடி பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதையடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

அதைத்தொடர்ந்து மாறனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை கருவடிக்குப்பம் சுடுகாட்டில் மாறனின் இறுதிச் சடங்கு நடந்தது. இதில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதற்கிடையே மாறன் கொலை வழக்கு தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்தவர்களில் புதுச்சேரி செட்டிப்பாளையத்தை சேர்ந்த தேவராசு மகன் ராஜசேகரன் (27), நெல்லிதோப்பை சேர்ந்த சாந்தலிங்கம் மகன் மணிகண்டன் (30), வில்லியனூர் மகாலிங்கம் மகன் காண்டீபன் (39), நொச்சிக்குப்பத்தை சேர்ந்த முனுசாமி மகன் ஞானசேகரன் (25) ஆகிய 4 பேர் நேற்று திண்டி வனம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்கள் 4 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு தாவூத்தம்மாள் உத்தரவிட்டார். அதன்படி சரண் அடைந்த ராஜசேகரன் உள்ளிட்ட 4 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மற்றகுற்றவாளிகள் கடலூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. அதையடுத்து சிறப்பு அதிரடிப்படை போலீசார் கடலூருக்கு விரைந்தனர். இதில் சுகுமாறன், விக்னேஷ், உதயா ஆகியோர் போலீசார் பிடியில் சிக்கியதாக தெரிகிறது. அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான மூர்த்தி, அவருடைய மனைவி திலகா உள்ளிட்ட மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். கடலூர் சிறையில் அடைக்கப்பட்டவர்களை புதுவை பெரியகடை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மாறன் கொலை வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளிகளான மூர்த்தி, அவருடைய மனைவி திலகா ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இந்த நிலையில் வைத்திக்குப்பத்தில் உள்ள மூர்த்தியின் வீட்டிற்கு நேற்று மாறனின் ஆதரவாளர்கள் சென்றனர். அவர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ், ஏ.சி. உள்பட அனைத்து பொருட்களையும் உடைத்து சூறையாடினார்கள். மேலும் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று அங்கு போடப்பட்டிருந்த கொட்டகைக்கு தீயிட்டு கொளுத்தினார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் புதுவை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் வைத்திக்குப்பம் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story