தமிழகத்தில் இனி வரும் தேர்தல்களில் குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்று அ.தி.மு.க.வை மீட்போம் - தங்கதமிழ்செல்வன் பேச்சு


தமிழகத்தில் இனி வரும் தேர்தல்களில் குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்று அ.தி.மு.க.வை மீட்போம் - தங்கதமிழ்செல்வன் பேச்சு
x
தினத்தந்தி 9 March 2018 10:45 PM GMT (Updated: 9 March 2018 5:55 PM GMT)

தமிழகத்தில் இனி வரும் தேர்தல்களில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அ.தி.மு.க.வை மீட்போம் என்று தேனியில் நடந்த அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டத்தில் தங்கதமிழ்செல்வன் பேசினார்.

தேனி,

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது, தமிழகத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது போன்ற சம்பவங்களை கண்டித்தும், எச்.ராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், தேனி மாவட்டத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் தேனி பங்காளமேடு பகுதியில் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. தேனி நகர பொறுப்பாளர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பெத்தாட்சி ஆசாத், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம் மற்றும் காங்கிரஸ், எஸ்.யு.சி.ஐ. கம்யூனிஸ்டு கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் அணியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் அந்த அணியை சேர்ந்த சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், எச்.ராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், பெரியார் சிலையை சேதப்படுத்திய பா.ஜ.க.வினரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் தினகரன் அணியை சேர்ந்த தங்கதமிழ்செல்வன் பேசியதாவது:-

சமூக நீதிக்காக பாடுபட்ட தந்தை பெரியாருடைய சிலையை உடைப்போம் என்று கூறிய எச்.ராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பெரியாரை இழிவு படுத்தி பேசும், எச்.ராஜாவுக்கு நாவடக்கம் வேண்டும். திரிபுராவில் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க.வினர் லெனின் சிலையை அகற்றுவது என்பது ஆணவத்தின் உச்சம்.

ஒரு பத்திரிகையில் கார்ட்டூனிஸ்ட் ஒருவர் ஒரு படத்தை வரைகிறார். இரவோடு இரவாக அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதேபோல், பெரியாரை இழிவுபடுத்திய எச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை.

இங்கே கண்டனத்தை பதிவு செய்ய தி.மு.க., கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் என அனைத்துக் கட்சிகளோடும் நாங்களும் கூடி இருக்கிறோம் என்றால் எங்களின் சுயநலத்துக்காக அல்ல. முன்னோர்கள் விட்டுச் சென்ற பாரம்பரியம் விட்டுச் செல்லக்கூடாது என்பதற்காக தான்.

லெனின் சிலை அகற்றம், பெரியார் சிலை சேதம் தொடர்பாகவும், எச்.ராஜா மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பா.ஜ.க.வையும், மோடி அரசையும் கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடக்கும். அதேபோல், மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுக்கு ஆதரவாக விதியை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும்.

நீட் தேர்வு குறித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதால் மத்திய அரசு நாடு முழுவதும் அதை அமல்படுத்தியது..அதே நேரத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில், கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கிறது. மத்திய அரசும் அமைக்க மறுக்கிறது.

நாங்கள் அ.தி.மு.க. அம்மா அணியாக செயல்பட அனுமதி கிடைத்து உள்ளது. குக்கர் சின்னமும் கிடைத்து உள்ளது. இனி அ.தி.மு.க. 2 அணியாக செயல்படுவோம். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் உள்ளாட்சி தேர்தல் எது வந்தாலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, இரட்டை இலை சின்னத்தையும், அ.தி.மு.க.வையும் மீட்போம்.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story