துப்பாக்கியை காட்டி கொள்ளையடித்த 6 பேர் கைது


துப்பாக்கியை காட்டி கொள்ளையடித்த 6 பேர் கைது
x
தினத்தந்தி 10 March 2018 11:45 PM GMT (Updated: 10 March 2018 9:09 PM GMT)

வியாபாரிகளை காரில் கடத்தி துப்பாக்கியை காட்டி கொள்ளையடித்த 6 பேர் கைது உடந்தையாக இருந்த சகவியாபாரியும் சிக்கினார்.

ஆலந்தூர்,

சென்னை விமான நிலையத்துக்கு சென்ற வியாபாரிகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் என்று கூறி காரில் கடத்தி ரூ.9½ லட்சம் கொள்ளையடித்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த சக வியாபாரியும் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் பிர்தோஸ் (வயது 24), அக்பர் அஜீஸ் (32), முகமது பயாஸ் (30), சுக்கூர் (32), நைனார்முகமது (34). இவர்கள் 5 பேரும் வியாபாரிகள். வெளிநாட்டு பொருட் களை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். இலங்கை செல்வதற்காக சென்னை வந்த இவர்கள், திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருந்தனர்.

கடந்த 4-ந் தேதி நள்ளிரவு 5 பேரும் சென்னை விமான நிலையத்திற்கு ஒரு காரில் புறப்பட்டனர். கிண்டி ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கார் வந்தபோது, மற்றொரு காரில் வந்த 6 பேர், இவர்கள் சென்ற காரை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் தாங்கள், போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் என்று கூறி, வியாபாரிகள் 5 பேரையும் தங்களது காரில் ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டுக்கு கடத்தி சென்றனர்.

காரில் வைத்து துப்பாக்கியை காட்டி வியாபாரிகளிடம் இருந்த ரூ.9½ லட்சம் மதிப்புள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு பணத்தை கொள்ளையடித்த கும்பல் அவர்களை ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு என தனித்தனியாக ஆங்காங்கே இறக்கி விட்டுவிட்டு தப்பி சென்று விட்டது.

இதுகுறித்து பரங்கிமலை போலீசில் முகமது பயாஸ் புகார் செய்தார். அதன்பேரில் கொள்ளை கும்பலை பிடிக்க சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதனையடுத்து தென்சென்னை இணை கமிஷனர் மகேஸ்வரி, பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி, உதவி கமிஷனர் மோகன்தாஸ் மேற்பார்வையில் 7 தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் வியாபாரிகளிடம் விசாரணை நடத்தியபோது, அக்பர்அஜீஸ் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவரிடம் தீவிரமாக விசாரித்தபோது, தனது கூட்டாளிகள் மூலம் பணத்தை கொள்ளையடிக்க அவர் திட்டமிட்டது தெரியவந்தது.

இதனையடுத்து வியாபாரிகளிடம் பணம் கொள்ளையடித்ததாக திருச்சியை சேர்ந்த சேக்முகமது (25), நிர்மல்ஜோஸ் (29), அருண்குமார் (28), மோகன்ராஜ் (38), பிரின்ஸ் பிரசன்னராஜ் (30), சரவணன் (46) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் வியாபாரி அக்பர்அஜீசும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 36 ஆயிரம், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 2 போலி துப்பாக்கிகளும், வாக்கிடாக்கி, கைவிலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து கைதான அக்பர்அஜீஸ் கூறுகையில், ‘திருவல்லிக்கேணியை சேர்ந்த வழிப்பறி கொள்ளையன் ஜக்கரியா என்பவரது ஏற்பாட்டின் பேரில், போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் போல் நடித்து பணம் பறிக்க திட்டமிட்டு பணத்தை கொள்ளையடித்தோம்’ என்று தெரிவித்தார். இதையடுத்து ஜக்கரியாவை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story