அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
திருப்பூர்,
தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவ சேவை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ சேவை வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இதில் பொதுமருத்துவ பரிசோதனை, இ.சி.ஜி., இருதய பரிசோதனை, நுரையீரல் செயல் திறன் அறியும் பரிசோதனை, ரத்த பரிசோதனைகளும் இலவசமாக செய்து கொள்ளலாம். மேலும், இருதய, நுரையீரல் மருத்துவ நிபுணரின் ஆலோசனை உள்ளிட்டவையும் பெற்றுக்கொள்ளலாம். இந்த மருத்துவ சேவை வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் நேற்று மருத்துவ முகாம் தொடங்கியது.
இதன் தொடக்க விழாவிற்கு சு.குணசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கரைப்புதூர் ஏ.நடராஜன், கே.என்.விஜயகுமார், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவசேவை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுகிற வகையில் அமைந்துள்ளது.
ஏற்றுமதியாளர்களை கொண்டு திகழும் இந்த திருப்பூர் இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த திருப்பூரில் தற்போது தொடங்கப்பட்டுள்ள நடமாடும் மருத்துவமனை என்பது ஒரு வரலாற்றை படைக்கின்ற அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் சிறந்த முறையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள இது வாய்ப்பாக இருக்கும். இது திருப்பூர் மக்களுக்கு பெரும் உபயோகமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு “பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இது அரசு பள்ளிகளுக்கு மட்டுமின்றி, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். இதனால் பெற்றோரும், மாணவ-மாணவிகளும் கவலை படவேண்டியது அவசியம் இல்லை” என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
இதில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கண்ணப்பன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story