திருவாடானை யூனியனில் கடும் குடிநீர் தட்டுப்பாடு; தெருக்குழாய்களில் பெண்கள் தவம்கிடக்கும் அவலம்


திருவாடானை யூனியனில் கடும் குடிநீர் தட்டுப்பாடு; தெருக்குழாய்களில் பெண்கள் தவம்கிடக்கும் அவலம்
x
தினத்தந்தி 15 April 2018 10:00 PM GMT (Updated: 15 April 2018 7:35 PM GMT)

திருவாடானை யூனியனில் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் தெருக்குழாய்களில் பெண்கள் தவம்கிடக்கும் அவலநிலை உருவாகி உள்ளது.

தொண்டி,

திருவாடானை யூனியனில் 47 கிராம ஊராட்சிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை இப்பகுதியை வஞ்சித்து விட்டதால் மாவட்டத்தில் மிகப்பெரிய யூனியனான இங்கு கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் கண்மாய், ஊருணி, குளங்கள் என அனைத்து நீர் நிலைகளும் வறண்டு காணப்படுகிறது. கூட்டு குடிநீர் திட்டங்கள் மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் வினியோகம் செய்யப்படும் குடிநீரும் பல கிராமங்களுக்கு கானல் நீராகவே இருந்து வருகிறது. வறட்சி காரணமாக கூட்டு குடிநீர் திட்ட ஆழ்குழாய்களிலும் தண்ணீர் ஊற்று பெரிய அளவில் இல்லாததால் குடிநீரை வினியோகம் செய்ய முடியவில்லை. காவிரி குடிநீரும் பல கிராமங்களுக்கு செல்லவில்லை. குடிநீர் நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலையில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி விடுகிறது. இதனால் இந்த யூனியனை சேர்ந்த பொதுமக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுஉள்ளனர். சில இடங்களில் குழாய் உடைப்பில் கசியும் தண்ணீரை பெண்கள் காத்துக்கிடந்து சேகரித்து வருகின்றனர்.

இந்த யூனியனில் எங்கு பார்த்தாலும் பெண்கள் குடிநீர் குடங்களுடன் தெருக்குழாய்களில் தண்ணீருக்காக இரவு, பகலாக தவம் கிடக்கின்றனர். கிராமங்களில் சமுதாய கிணறுகள் இருந்தும் தூர்வாரப்படாத நிலையில் கிணற்று நீரை பயன்படுத்த முடியவில்லை. பல இடங்களில் கிணறுகளில் தண்ணீர் ஊற்று ஊறும் வரை காத்திருந்து வரிசை படி ஒரு குடம் தண்ணீரை எடுத்து சென்று தான் சமைக்கவும் குடிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். கடலோர கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் பிரச்சினைகள் ஏராளமாக இருந்து வருகிறது. பல கடலோர கிராமங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தினமும் ரூ.300 செலவு செய்து குடிநீர் வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- திருவாடானை யூனியனில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள், பெண்கள் ஒரு குடம் குடிநீர் பிடிக்க இரவு, பகலாக காத்திருக்க வேண்டிய அவல நிலை உருவாகி உள்ளது. ஆனால் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து தெருக்களில் வீணாகி ஓடுகிறது. இதனை சரி செய்தால் பல கிராமங்களுக்கு ஓரளவு குடிநீர் கிடைக்கும். ஆனால் இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தால் அந்த குழாய் எங்கள் பராமரிப்பில் இல்லை எனவும் வேறு துறை தான் அதனை சரி செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். பல கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் முற்றிலும் தடைபட்டு பல வருடங்கள் கடந்து விட்டது. அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் கிராமங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அங்குள்ள நீர் ஆதாரங்களின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் தற்போது குடிநீர் திட்டங்கள் மூலம் செல்லும் குடிநீர் குழாய்கள் உடைப்புகளை உடனடியாக சரிசெய்ய உரிய நிதி ஊராட்சிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும். இந்த யூனியனில் உள்ள மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்களை முடுக்கி விட்டு குடிநீர் தட்டுபாட்டை போக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story