அதிக மதிப்பெண் கிடைக்கும் என்று கூறி அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க மாணவிகளை கட்டாயப்படுத்திய பேராசிரியை


அதிக மதிப்பெண் கிடைக்கும் என்று கூறி அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க மாணவிகளை கட்டாயப்படுத்திய பேராசிரியை
x
தினத்தந்தி 15 April 2018 10:45 PM GMT (Updated: 15 April 2018 8:35 PM GMT)

அதிக மதிப்பெண் கிடைக்க வேண்டுமென்றால் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று 4 மாணவிகளை ஆசிரியை கட்டாயப்படுத்தும் ஆடியோ பேச்சு ‘வாட்ஸ்-அப்‘பில் பரவி வருகிறது. இதனைதொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அருப்புக்கோட்டை,

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியையான ஒருவர் 4 மாணவிகளுடன் செல்போனில் பேசிய பேச்சு ‘வாட்ஸ்-அப்‘பில் வேகமாக பரவி வருகிறது.

மாணவிகள் 4 பேரும் ஒன்றாக இருப்பதை உறுதி செய்து கொண்டு பேசும் அந்த பேராசிரியை, தான் சொல்ல வரும் தகவல் ரகசியமாக இருக்க வேண்டியது என கூறுகிறார். மேலும் தற்போதுதான் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்தேன். உயர் அதிகாரிகள் கல்லூரி மாணவிகளை சில விஷயங்களுக்காக எதிர்பார்க்கிறார்கள். நீண்ட நாட்களாக கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

பல்கலைக்கழகத்தில் என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் பண்ண முடியும். உங்கள் பெயரையெல்லாம் பெயர் பட்டியலில் இடம் பெற நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் ரெகுலர் கிளாஸ் அட்டண்ட் பண்ண வேண்டாம். டி.என்.பி.எஸ்.சி., தேர்வாக இருந்தால் கூட சரிதான். எல்லாவற்றுக்கும் ஒரு அட்ஜெஸ்ட் மெண்ட் தேவைப்படுகிறது. நீங்கள் ஓசூருக்கு வந்து விடுங்கள்.

என்னைப்போல 400 பேர் இருக்கிறார்கள். உங்களுக்கு டிகிரி வாங்கிக்கொடுப்பதில் நான் கவனமாக இருக்கிறேன். நீங்கள் ஒத்துழைக்காவிட்டால் தண்டனை கொடுக்க மாட்டேன். உங்களை கைதூக்கி விடவே அழைக்கிறேன். இந்தக்காலத்தில் இப்போது நான் பேசும் விஷயம் ரொம்ப ரொம்ப சாதாரணம் என்பது உங்களுக்கும் தெரியும். உலகத்துக்கும் தெரியும். எனக்கும் தெரியும். இதை பாசிட்டீவ் ஆக எடுத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறாக உரையாடல் உள்ளது.

மாணவிகள் இது வேண்டாம் என்று மறுத்த போதும், அவசரப்பட்டு முடிவு எடுக்காதீர்கள். உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது, பொறுமையாக யோசித்து கூறுங்கள் எனவும் அந்த பேராசிரியை பேசியுள்ளார். சுமார் 20 நிமிடம் அவர் பேசியுள்ளார்.

அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க மாணவிகளை கட்டாயப்படுத்தும் இந்த வாட்ஸ்-அப் உரையாடல் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து அவரை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

Next Story