வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் சட்டசபை தேர்தலையொட்டி இதுவரை 1,127 மனுக்கள் தாக்கல்


வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் சட்டசபை தேர்தலையொட்டி இதுவரை 1,127 மனுக்கள் தாக்கல்
x
தினத்தந்தி 23 April 2018 11:30 PM GMT (Updated: 23 April 2018 7:32 PM GMT)

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி இதுவரை 1,127 பேர் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று(செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும்.

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம்(மே) 12-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் கடந்த 17-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, ஜனதா தளம்(எஸ்) கட்சி மாநில தலைவர் குமாரசாமி உள்பட முக்கிய தலைவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் விடுமுறைக்கு பிறகு நேற்று மீண்டும் மனு தாக்கல் தொடங்கியது. காலை 11 மணிக்கு தொடங்கிய மனு தாக்கல் செய்யும் பணி மதியம் 3 மணிக்கு நிறைவடைந்தது. இதில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தொகுதியிலும், பா.ஜனதா சார்பில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியிலும் போட்டியிட மனு தாக்கல் செய்தனர்.

மனு தாக்கலுக்கு முன்பு அவர்கள் இருவரும் தங்கள் கட்சி தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து மனுக்களை தாக்கல் செய்தனர். அதேப்போல் காங்கிரஸ் சார்பில் பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் சர்வக்ஞநகர், விவசாயத்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா பேட்ராயனபுரா, சமூக நலத்துறை மந்திரி ஆஞ்சனேயா சித்ரதுர்கா மாவட்டம் ஹொலல்கெரே, உணவுத்துறை மந்திரி யு.டி.காதர் மங்களூரு, வருவாய்த்துறை மந்திரி காகோடு திம்மப்பா சாகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பா.ஜனதா சார்பில் முன்னாள் மந்திரிகள் வி.சோமண்ணா கோவிந்தராஜ்நகர் தொகுதியிலும், அரவிந்த் லிம்பாளி மகாதேவபுரா தொகுதியிலும் போட்டியிட மனு தாக்கல் செய்தனர். பா.ஜனதாவில் டிக்கெட் கிடைக்காததால் கடும் ஏமாற்றம் அடைந்த திப்பேசாமி எம்.எல்.ஏ. முலகால்மூரு தொகுதியிலும், பெல்லுப்பி பசவனபாகேவாடி தொகுதியிலும் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தனர். நேற்று மட்டும் 208 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர். ஆகமொத்தம் இதுவரை 1,127 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனு தாக்கல் செய்ய இன்று(செவ்வாய்க் கிழமை) கடைசி நாள் ஆகும்.

Next Story