ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி சென்னையில் போராட்டம் - அய்யாக்கண்ணு பேட்டி


ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி சென்னையில் போராட்டம் - அய்யாக்கண்ணு பேட்டி
x
தினத்தந்தி 23 April 2018 11:15 PM GMT (Updated: 23 April 2018 8:37 PM GMT)

ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என்று திருப்பூரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.

திருப்பூர்,

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு, மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்யக்கோரி கன்னியாகுமரி முதல் சென்னை வரை விவசாயிகள் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று திருப்பூர் வந்த அய்யாக்கண்ணு, திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியை சந்தித்து மனு கொடுத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

விவசாயிகள் விளைவிக்கும் பொருளுக்கு உரிய விலை கிடைக்கச்செய்ய வேண்டும். விவசாயம் செய்ய போதுமான தண்ணீர் வசதியை செய்து கொடுக்க வேண்டும். மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்ய வேண்டும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்றினால் திருப்பூர், கோவை, ஈரோடு பகுதியில் 10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாய சாகுபடி செய்ய முடியும். எனவே இந்த திட்டத்தை வருகிற ஜூன் மாதம் 9-ந் தேதிக்குள் நிறைவேற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் விவசாயிகளை திரட்டி சென்னையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

விவசாய நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைப்பதை தவிர்த்து பூமிக்கு அடியில் கேபிள் மூலமாக மின்கம்பிகளை கொண்டு செல்லும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தொடர்ந்து போராடி வருகிறோம். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு நிலையான முடிவை அறிவிக்காமல் காலம் கடத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story