அரியலூரில் விடைத்தாள் மதிப்பிடும் பணிகளை புறக்கணித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


அரியலூரில் விடைத்தாள் மதிப்பிடும் பணிகளை புறக்கணித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 April 2018 10:30 PM GMT (Updated: 24 April 2018 7:42 PM GMT)

அரியலூரில் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பிடும் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாமரைக்குளம்,

அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு விடைத்தாள் மதிப்பிடும் பணிகளை புறக்கணித்து தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் மற்றும் ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாநில தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கருணாநிதி முன்னிலை வகித்தார். ஜாக்டோ-ஜியோ மாநிலத்தலைவர் பெரியசாமி பங்கேற்று பேசினார்.

காவிரி மேலாண்மை வாரியம்...

ஆர்ப்பாட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் 21 மாத நிலுவை தொகையினை வழங்க வேண்டும். அனைத்து பிரிவு ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி கல்வி துறையில் இயக்குனர்களை இணைப்பது மற்றும் இணை இயக்குனர்களை உருவாக்குவது முதலிய நடவடிக்கைகளை கைவிட வேண்டும். ஒப்பந்த பணிக்காலம், தொகுப்பூதிய பணிக்காலம் ஆகியவற்றை முறையான பணிக்காலமாக வரன்முறை செய்ய வேண்டும். பின்னடைவு இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை நியமன நாள் முதல் பட்டதாரி ஆசிரியர்களாக வரன்முறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

Next Story