திருமணமான மறுநாளே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


திருமணமான மறுநாளே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 27 April 2018 10:41 PM GMT (Updated: 27 April 2018 10:40 PM GMT)

வாணியம்பாடியில் திருமணமான மறுநாளே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வாணியம்பாடி,

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் மருத்துவர் தெருவை சேர்ந்தவர் விநாயகம். இவரது மகள் மீனா (வயது 20), 10-ம் வகுப்பு படித்துவிட்டு கடந்த 3 ஆண்டுகளாக திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவருக்கும், குரிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்த சின்னராஜ் மகன் கோவிந்தராஜ் (25) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. கோவிந்தராஜ் நாதஸ்வர கலைஞர்.

இந்த நிலையில் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு, கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் இருந்து மீனா வாணியம்பாடிக்கு அழைத்து வரப்பட்டார். கடந்த 25-ந் தேதி கோவிந்தராஜிக்கும், மீனாவுக்கும் குரிசிலாப்பட்டில் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் மணமக்கள் இருவரும் வாணியம்பாடியில் உள்ள மணமகள் வீட்டிற்கு விருந்திற்காக சென்றனர். அப்போது அருகில் உள்ள உறவினர் வீட்டில் துணி துவைத்துவிட்டு வருவதாக கூறிவிட்டு, மீனா வீட்டில் இருந்து புறப்பட்டார். உடன் செல்லுமாறு 8 வயது சிறுவன் ஒருவனை உறவினர்கள் அனுப்பி வைத்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

உறவினர் வீட்டிற்குள் மீனா நுழைந்த சிறிது நேரத்திலேயே உடன் சென்ற சிறுவன் கூச்சலிட்டான். சிறுவனின் சத்தம் கேட்டு உறவினர்கள் வந்து பார்த்தபோது, திருமணத்தின் போது கட்டியிருந்த முகூர்த்த சேலையால் மீனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுபற்றி போலீசாருக்கு தெரிவிக்காமல் மீனாவின் உடலை அடக்கம் செய்வதற்கான வேலையில் உறவினர்கள் ஈடுபட்டனர். ஆனால் இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாணியம்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உதவி கலெக்டர் விசாரணை

இதுதொடர்பாக வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமான மறுநாளே மீனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story