தாளவாடி வனப்பகுதியில் ஆண் யானை சாவு


தாளவாடி வனப்பகுதியில் ஆண் யானை சாவு
x
தினத்தந்தி 28 April 2018 9:45 PM GMT (Updated: 28 April 2018 7:21 PM GMT)

தாளவாடி வனப்பகுதியில் ஆண் யானை இறந்து கிடந்தது.

தாளவாடி,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், டி.என்.பாளையம் ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் நீண்ட தூரம் அலைந்து திரிகின்றன. வனவிலங்குகளுக்காக அமைக்கப்பட்டுள்ள செயற்கை குட்டைகளில் வனத்துறையினர் அவ்வப்போது தண்ணீர் நிரப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட இரியாபுரம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றார்கள். அப்போது அடர்ந்த வனப்பகுதியில் ஒரு ஆண் யானை இறந்து கிடந்தது. அருகே சென்று பார்த்த வனத்துறையினர் இதுபற்றி உடனே தாளவாடி வனச்சரகர் சிவக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவர் அசோகன் மற்றும் புலிகள் காப்பக துணை இயக்குனர் பத்மா ஆகியோர் யானை இறந்து கிடந்த இடத்துக்கு சென்று பார்த்தார்கள்.

அதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவர் அசோகன் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். அப்போது அவர், ‘இறந்த ஆண் யானைக்கு 15 வயது வரை இருக்கலாம். கடும் வறட்சியால் தீவனம் இல்லாமலும், குடற்புழு நோய் தாக்கியும் கடந்த 5 நாட்களுக்கு முன் இறந்துள்ளது‘ என்றார். அதன்பின்னர் யானையின் தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டு, மற்ற விலங்குகளுக்கு உணவாக யானையின் உடல் அங்கேயே விடப்பட்டது. 

Next Story