உதவி கமாண்டன்ட் பணிகளுக்கான யூ.பி.எஸ்.சி. தேர்வு


உதவி கமாண்டன்ட் பணிகளுக்கான யூ.பி.எஸ்.சி. தேர்வு
x
தினத்தந்தி 30 April 2018 7:09 AM GMT (Updated: 30 April 2018 7:09 AM GMT)

மத்திய ஆயுதப்படைப் பிரிவுகளில் உதவி கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான யூ.பி.எஸ்.சி. தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 398 பணியிடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.), பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் ஏற்படும் அதிகாரி பணியிடங்களை தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது. தற்போது மத்திய ஆயுதப்படை போலீஸ் (சி.ஏ.பி.எப்.) பிரிவுகளில் ‘அசிஸ்டன்ட் கமாண்டன்ட்’ பணியிடங்களை நிரப்ப, யூ.பி.எஸ்.சி. அமைப்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ‘சென்டிரல் ஆர்ம்டு போலீஸ் போர்சஸ் (ஏ.சி.) எக்ஸாமினேசன்-2018’ எனப்படும் இந்த தேர்வின் மூலம், மொத்தம் 398 உதவி கமாண்டன்ட் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

படைப்பிரிவு வாரியான பணியிடங்கள் விவரம்: பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் (பி.எஸ்.எப்.) பிரிவில் 60 பணியிடங்களும், சென்டிரல் ரிசர்வ் போலீஸ் படைப்பிரிவில் (சி.ஆர்.பி.எப்.) -179 பணியிடங்களும், சி.ஐ.எஸ்.எப். படைப்பிரிவில் 84 இடங்களும், இந்தோ திபெத்தியன் பார்டர் போலீஸ் (ஐ.டி.பி.பி.) பிரிவில் 84 பணியிடங்களும், சசாஸ்திரா சீமா பல் (எஸ்.எஸ்.பி.) பிரிவில் 29 பணியிடங்களும் உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு 12-8-2018-ந் தேதி நடத்தப் படுகிறது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-8-2018 தேதியில் 20 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-8-1993 மற்றும் 1-8-1998 ஆகிய தேதி களுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வுகளும் அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல் கலைக்கழகம் மற்றும் கல்வி மையங்களில் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்து தேர்வு, உடல் அளவுகள் தேர்வு, உடல்திறன் தேர்வு மருத்துவ பரிசோதனை மற்றும் நேர்காணல்/ஆளுமைத்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 21-5-2018-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். பார்ட் 1, பார்ட் 2 என்ற இருநிலைகளில் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். முன்னதாக புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும்.

இது பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ள www.upsc.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.

Next Story