கூடலூர் பகுதியில் தொடர் மழையால் தேயிலை விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு, விவசாயிகள் மகிழ்ச்சி


கூடலூர் பகுதியில் தொடர் மழையால் தேயிலை விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு, விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 4 May 2018 10:15 PM GMT (Updated: 4 May 2018 8:17 PM GMT)

கூடலூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் தேயிலை விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில வாரங்களாக அதிகமாக இருந்தது. இதனால் நீர்நிலைகள் வறண்டன. மேலும் வனப்பகுதியில் வறட்சி நிலவியது. இதன் காரணமாக வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டது. இதேபோல் முக்கிய தடுப்பணைகளில் நீர் வரத்து குறைந்ததால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்தனர். தொடர்ந்து தேயிலை தோட்டங்களிலும் ஈரத்தன்மை இல்லாமல் போனது.

இதனால் பச்சை தேயிலை விளைச்சல் பாதிக்கப்பட்டது. மழைக்காலத்தில் விளைச்சல் அதிகமாக காணப்படும். இந்த காலக்கட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு தினமும் சுமார் 45 ஆயிரம் கிலோ பச்சை தேயிலை அரவைக்காக கொண்டு வரப்படும். ஆனால் கோடை வெயிலின் தாக்கத்தால் பச்சை தேயிலை விளைச்சல் அடியோடு குறைந்தது. இதனால் சராசரியாக தொழிற்சாலைகளுக்கு 20 ஆயிரம் கிலோ வரை மட்டுமே வந்தது.

இதனால் தேயிலை செடிகளை பாதுகாக்க கோடை மழை பெய்தால் மட்டுமே தீர்வு காண முடியும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெயிலால் பாதிக்கப்பட்ட தேயிலை செடிகள் துளிர்விட்டு தோட்டங்கள் பசுமைக்கு திரும்பி உள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

நடப்பு மாதத்தில் கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் பரவலாக தொடர் மழை பெய்து வருவதால் தேயிலை விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இன்னும் சில வாரங்கள் இதே நிலை நீடித்தால் கோடையில் இருந்து தேயிலை செடிகள் பாதுகாக்கப்பட்டு விடும். அடுத்த மாதம் முதல் பருவமழை பெய்ய தொடங்கி விடும். அதன்பின்னர் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story