கொலை மிரட்டல் விடுத்து குடிபோதையில் போலீஸ் ஏட்டை தாக்கிய 4 வாலிபர்கள் கைது


கொலை மிரட்டல் விடுத்து குடிபோதையில் போலீஸ் ஏட்டை தாக்கிய 4 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 4 May 2018 10:15 PM GMT (Updated: 4 May 2018 8:17 PM GMT)

காரைக்குடியில் கொலை மிரட்டல் விடுத்து குடிபோதையில் போலீஸ் ஏட்டை தாக்கிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

காரைக்குடி,

காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டுவாக பணியாற்றி வருபவர் பூப்பாண்டி(வயது41). இவர், மற்றொரு ஏட்டு மைக்கேல் என்பவருடன் காரைக்குடி 100 அடி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது காரைக்குடி புதிய பஸ் நிலையம் அருகே ஒரு கும்பல் குடிபோதையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரகளை செய்துகொண்டிருந்தனர்.

இதையடுத்து போலீஸ் ஏட்டுகள் பூப்பாண்டி மற்றும் மைக்கேல் ஆகிய 2 பேரும் அங்கு சென்று அவர்களை சத்தம் போட்டு நடவடிக்கை எடுக்க முயன்றனர். அப்போது அந்த கும்பல் போலீஸ் ஏட்டு பூப்பாண்டியை தரக்குறைவாக பேசி அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்து உடனிருந்த மற்றொரு ஏட்டு மைக்கேல் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த் தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். இதையடுத்து போலீசாரைக் கண்டதும் போதையில் இருந்த அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். உடனே போலீசார் விரட்டிச் சென்று அந்த கும்பலை மடக்கி பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தேவகோட்டை அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா(வயது23), அருண்குமார்(20), காரைக்குடி காந்திபுரத்தைச் சேர்ந்த கதிரேசன்(24), செஞ்சை பகுதியைச் சேர்ந்த செல்வகணபதி(24) ஆகிய 4 பேர் என தெரிய வந்தது. இதையடுத்து 4 வாலிபர்கள் மீது போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தது, ஆபாசமாக பேசியது, போலீசாரை தாக்கியது, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காரைக்குடி போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story