ரூ.5.13 கோடியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது


ரூ.5.13 கோடியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 4 May 2018 10:30 PM GMT (Updated: 4 May 2018 10:15 PM GMT)

மத்தூர் ஒன்றியத்தில் ரூ.5.13 கோடியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்தில் ரூ.5.13 கோடி மதிப்பிலான புதிய தார்சாலைகள் அமைக்கும் பணிகள் பூமிபூஜையுடன் தொடங்கியது. மத்தூர் பதி முதல் பள்ளத்தூர் வழியாக காக்கல்கரை சாலை வரை புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை மத்தூர் பதியில் நடைபெற்றது. ரூ.1.20 கோடி மதிப்பிலான இச்சாலை அமைக்கும் பணியானது பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெறுகிறது.

பூமிபூஜைக்கு கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் அசோக்குமார் தலைமை தாங்கினார். ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் பணியை தொடங்கி வைத்தார். இதேபோல் மேக்லாம்பட்டியில் இருந்து திப்பம்பட்டி வழியாக போச்சம்பள்ளி சாலை வரையிலான புதிய தார்சாலை அமைக்கும் பணி ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.

பெங்களூரு - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மாதம்பதி முருகர் கோவில் வழியாக போச்சம்பள்ளி சாலை வரை செல்லும் புதிய தார்சாலைக்கான பூமிபூஜையும் நடைபெற்றது. இப்பணியானது ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ளது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று கொடமாண்டப்பட்டி முதல் முருக்கம்பட்டி வழியாக கெரிகப்பள்ளி கேட் வரை செல்லும் புதிய தார்சாலை அமைக்கும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டது. இப்பணி ரூ.1.75 கோடியில் நடக்கிறது.

பூமிபூஜை நிகழ்ச்சிகளில் ஒன்றிய மாணவரணி செயலாளர் சக்தி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் முருகன், ஒப்பந்ததாரர்கள் கிருஷ்ணமூர்த்தி, வேடியப்பன், கேசவன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அலமேலு சுப்பிரமணி, சின்னபாப்பா நடராஜன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் பரிமளா சென்னகிருஷ்ணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் பியாரேஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story