உடற்பயிற்சியாளரிடம் ரூ.50 ஆயிரம் பறித்த 2 பேர் கைது


உடற்பயிற்சியாளரிடம் ரூ.50 ஆயிரம் பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 May 2018 11:17 PM GMT (Updated: 4 May 2018 11:17 PM GMT)

சி.பி.ஐ. அதிகாரிகள் போல நடித்து உடற்பயிற்சியாளரிடம் ரூ.50 ஆயிரம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை அந்தேரி மேற்கு பகுதியை சேர்ந்த உடற்பயிற்சியாளர் ஒருவர் ஓரினச்சேர்க்கையில் விருப்பம் கொண்டவர். இவருக்கு சமீபத்தில் ஆன்லைனில் ஒருவர் அறிமுகம் ஆனார். அவர் உடற்பயிற்சியாளருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட சம்மதம் தெரிவித்தார். சம்பவத்தன்று உடற்பயிற்சியாளர் அந்த நபரை தனது வீட்டிற்கு அழைத்து இருந்தார்.

உடற்பயிற்சியாளரும், அந்த நபரும் தனியாக இருந்தபோது திடீரென ஒரு கும்பல் வீட்டிற்குள் புகுந்தது. அந்த கும்பல் தங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் என கூறியது.

பின்னர் அந்த கும்பல் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக உடற்பயிற்சியாளரை கைது செய்து விடுவோம் என மிரட்டி அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரத்தை பறித்துவிட்டு சென்றது.

இந்தநிலையில் உடற்பயிற்சியாளர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சி.பி.ஐ. அதிகாரிகள் என கூறி வீட்டில் புகுந்த கும்பல் திட்டமிட்டு உடற்பயிற்சியாளரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மோசடியில் ஈடுபட்ட வினாயக் (வயது34), அலிம் சேக் (29) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மோசடியில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Next Story