தடுப்பணைகள்-பண்ணைக்குட்டைகள் கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டார்


தடுப்பணைகள்-பண்ணைக்குட்டைகள் கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 4 May 2018 11:30 PM GMT (Updated: 4 May 2018 11:30 PM GMT)

நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் தடுப்பணைகள், பண்ணைக்குட்டைகள் உள்ளிட்ட கட்டுமான பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டார்.

எருமப்பட்டி,

நாமக்கல் மாவட்டத்தில், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் எருமப்பட்டி-1 நீர்வடிபகுதி திட்டத்தின் கீழ் ரூ.1.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணை, ரூ.75 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்புச்சுவர் மற்றும் எருமப்பட்டி-1 நீர்வடிபகுதி திட்டத்தின் கீழ் நிலம் இல்லாத விவசாய பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.18 ஆயிரம் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட தீவனப்புற்கள் வெட்டும் எந்திரத்தின் செயல்பாடுகளை கலெக்டர் பார்வையிட்டார்.

எருமப்பட்டி பகுதியில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பீட்டிலான தையல் எந்திரங்கள், கைத்தெளிப்பான், விசைத்தெளிப்பான். ஒட்டு மாங்கன்றுகளை கலெக்டர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து முட்டாஞ்செட்டியில் ரூ.1.48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணையை அவர் பார்வையிட்டார். மேலும் தோளுர் நீர்வடிப்பகுதி சுய உதவிக்குழுக்களுக்கு மொத்தம் ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள தையல் எந்திரம், சலவைப்பெட்டி, கோழி வளர்ப்புக்கான கூண்டு, கோழிக்குஞ்சு பொறிப்பான்கள் ஆகிய உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.

முட்டாஞ்செட்டி நீர்வடிப்பகுதிகளில் சுயஉதவிக்குழுக்களால் செயல்படுத்தப்பட்டு வரும் எண்ணை பிழியும் நாட்டுச்செக்கு, மாவு அரைக்கும் எந்திரம், மஞ்சள் அரைக்கும் எந்திரம் ஆகியவற்றின் செயல்பாடுகளை அவர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சிகளில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்ரமணியம், நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை, துணை இயக்குனர் தங்கராஜு, விரிவாக்க அலுவலர் பாலசுப்ரமணியன், பொறியாளர் சாமிநாதன், நீர்வடிப்பகுதி சங்க தலைவர்கள் மற்றும் நீர்வடிப்பகுதி வளர்ச்சி அணி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் பேசும் போது தெரிவித்ததாவது.

நாமக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டம் மத்திய, மாநில அரசின் நிதியுதவியுடன் பரமத்தி, கபிலர்மலை, சேந்தமங்கலம், கொல்லிமலை, நாமக்கல் உள்ளிட்ட 8 வட்டாரங்களில், 94 நீர்வடிப்பகுதிகளில் 47.850 ஹெக்டேர் நிலப்பரப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 2017-18-ல் 236 தடுப்பணைகள், 79 பண்ணைக்குட்டைகள், 320 நீர் உறிஞ்சும் குழிகள் அமைக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 12 நீர்வடிப்பகுதி திட்டங்கள் செயல்பாட்டில் இருந்து வந்தது. இதில் 6 நீர்வடிப்பகுதி திட்டங்கள் முழுமை பெற்று முடியும் நிலையில் உள்ளது. மீதமுள்ள 6 திட்டங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றது. தற்போது ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பரமத்தி வட்டாரத்தில் 7 நீர்வடிப்பகுதிகளும், கபிலர்மலை வட்டாரத்தில் 7 நீர்வடிப்பகுதிகளும், சேந்தமங்கலம் வட்டாரத்தில் 9 நீர்வடிப்பகுதிகளும், கொல்லிமலை வட்டாரத்தில் திட்டம்-1 ன் கீழ் 10 நீர்வடிப்பகுதிகளும், திட்டம்-2 ன் கீழ் 8 நீர்வடிப்பகுதிகளும், நாமக்கல் வட்டாரத்தில் 8 நீர்வடிப்பகுதிகளும் செயல்பட்டு வருகின்றது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

Next Story