‘கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சாயப்பட்டறை உரிமையாளரை கொன்றேன்’


‘கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சாயப்பட்டறை உரிமையாளரை கொன்றேன்’
x
தினத்தந்தி 4 May 2018 11:50 PM GMT (Updated: 4 May 2018 11:50 PM GMT)

பள்ளிபாளையம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சாயப்பட்டறை உரிமையாளரை கொலை செய்தேன் என்று கைதான தொழிலாளி போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது.

பள்ளிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 35). இவர் சொந்தமாக சாயப்பட்டறை நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆனந்தன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு பட்டறையின் உள்ளே ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை கார்த்திகேயன் (33) என்பவர் பள்ளிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் முன்பு சாயப்பட்டறை உரிமையாளர் ஆனந்தனை கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர், கார்த்தி கேயனை பள்ளிபாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு.

எனக்கு சொந்த ஊர் வெண்ணந்தூர். கடந்த 4 ஆண்டுகளாக பள்ளிபாளையத்தில் தங்கி சென்டரிங் தொழில் செய்து வருகிறேன். எனக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். ஆனந்தன் வீட்டுக்கு அருகில் சென்டரிங் வேலை செய்த போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் நான் அடிக்கடி அவருடைய வீட்டுக்கு சென்று வந்தேன்.

அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. நாங்கள் 2 பேரும் அடிக்கடி சாயப்பட்டறையில் உல்லாசமாக இருந்தோம். எங்களது கள்ளக்காதல் ஆனந்தனுக்கு தெரியவந்ததால் அவர் மனைவியை கண்டித்துள்ளார். ஒரு நாள் ஜெயலட்சுமியை உல்லாசத்துக்கு அழைத்த போது நமது உறவு எனது கணவருக்கு தெரிந்து விட்டது. இதனால் அவர் என்னை கண்டிக்கிறார் என்று கூறினார். மேலும் நமது கள்ளக்காதலுக்கு கணவர் ஆனந்தன் இடையூறாக இருக்கிறார் என்றும் கூறினர். இதனால் ஆனந்தனை கொலை செய்ய முடிவு செய்தேன்.

அதன்படி நேற்று முன்தினம் சாயப்பட்டறையில் ஆனந்தன் படுத்து இருந்தார். இதையறிந்த நான் அங்கு சென்று அம்மி கல்லை எடுத்து ஆனந்தன் தலை மீது போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன். இவ்வாறு அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை (33) கைது செய்தார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சாயப்பட்டறை உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story