கூடங்குளத்தில் தங்கும் விடுதியில் விஷம் குடித்து மயங்கிக்கிடந்த கள்ளக்காதல் ஜோடி


கூடங்குளத்தில் தங்கும் விடுதியில் விஷம் குடித்து மயங்கிக்கிடந்த கள்ளக்காதல் ஜோடி
x
தினத்தந்தி 5 May 2018 12:02 AM GMT (Updated: 5 May 2018 12:02 AM GMT)

கேரளாவை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து மயங்கி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடங்குளம்,

கூடங்குளத்தில் உள்ள தங்கும் விடுதியில் கேரளாவை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து மயங்கி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் இருவருக்கும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கேரள மாநிலம் கொல்லம் ராணிபுரத்தை சேர்ந்தவர் அய்யாச்சாமி. இவருடைய மனைவி மாலு என்ற ஜெயசூர்யா (வயது 30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அந்த பகுதியில் அய்யாச்சாமி ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலுக்கு அந்த பகுதியை சேர்ந்த பினு (41) என்பவர் அடிக்கடி வந்து சென்றார். இவருக்கு திருமணமாகி, மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் ஓட்டலுக்கு வந்து சென்ற பினுவுக்கும், மாலுவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

இது அரசல்புரசலாக இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்தது. இதனால், இருவரையும் அவரவர் வீட்டில் கண்டித்தனர். ஆனாலும் கள்ளக்காதல் ஜோடியினர் அடிக்கடி சந்தித்து வந்தனர். இதை அறிந்த அய்யாச்சாமி மனைவியை கடுமையாக கண்டித்ததுடன், பினுவை சந்திக்க தடை விதித்தார். இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஜோடி ஊரை விட்டு வெளியேறி கன்னியாகுமரிக்கு சென்றனர். அங்கு உல்லாசமாக சுற்றிய ஜோடி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் கூடங்குளம் ஆத்தங்கரை பள்ளிவாசலில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை வாடகைக்கு எடுத்து தங்கினர்.

இவர்கள் நேற்று முன்தினம் மாலையில் அறையை காலி செய்வதாக தங்கும் விடுதி ஊழியர்களிடம் கூறி உள்ளனர். ஆனால், நீண்ட நேரமாக அறையை காலி செய்யாததுடன், கதவும் பூட்டப்பட்டு இருந்ததால் ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். இதுகுறித்து கூடங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அந்த விடுதிக்கு விரைந்து சென்றனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பினுவும், மாலுவும் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி கிடந்தனர்.

அந்த 2 பேரும் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த 2 பேரையும் போலீசார் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக இருவரின் குடும்பத்தினருக்கும் கூடங்குளம் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையில், மாலுவை கண்டுபிடித்து தருமாறு அவருடைய கணவர் அய்யாச்சாமி கொல்லம் அருகில் உள்ள வட்டப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்து உள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கும் விடுதியில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கூடங்குளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story