சித்தராமையா தான் முதல்-மந்திரி வேட்பாளர் மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி


சித்தராமையா தான் முதல்-மந்திரி வேட்பாளர் மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 5 May 2018 12:02 AM GMT (Updated: 5 May 2018 12:02 AM GMT)

சித்தராமையாதான் முதல்-மந்திரி வேட்பாளர் என்றும், வருமான வரி சோதனையை கண்டு காங்கிரஸ் பயப்படவில்லை என்றும் மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு,

மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காங்கிரசில் முதல்-மந்திரி வேட்பாளர் சித்தராமையா தான். காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் உள்ளூர் தலைவர்கள் தலைமையில் தேர்தலை எதிர்கொள்கின்றன. ஆனால் பா.ஜனதா மட்டும், தேசிய தலைவர்களை முன்னிறுத்தி ஓட்டு கேட்கிறது. எடியூரப்பா முதல்-மந்திரி வேட்பாளராக இருந்தாலும், அவரது பேச்சு எதுவும் இங்கு நடப்பது இல்லை.

எல்லாவற்றையும் மோடி, அமித்ஷா தான் கட்டுப்படுத்துகிறார்கள். நான் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் இல்லை. ராகுல் காந்தி என்ன முடிவு எடுக்கிறாரோ அது தான் இறுதியானது. தலித் ஒருவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கவில்லை என்று காங்கிரசை பார்த்து கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் அதுபற்றி கேள்வி கேட்பது இல்லை.

இந்த முறை காங்கிரசில் ஒக்கலிகர் சமூகத்திற்கு அதிக டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகளில் போட்டியிட சித்தராமையா டிக்கெட் கேட்கவில்லை. வடகர்நாடக மக்கள் விரும்பியதால் சித்தராமையா பாதாமி தொகுதியில் போட்டியிட்டுள்ளார். பங்காரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது ரூ.1 லட்சத்திற்கு ஒரு வீட்டுமனை எனக்கு வழங்கினார். அதன் சந்தை விலை தற்போது ரூ.5 கோடியாக உயர்ந்துள்ளது.

இப்படி தான் எனது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. மற்றபடி நான் சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கி குவிக்கவில்லை. நாட்டின் உயர்ந்த பதவியில் இருக்கும் மோடி தரம் தாழ்ந்து பேசுவது சரியல்ல. மென்பொருள் உற்பத்தியில் பெங்களூருவின் பங்கு 39 சதவீதம். முன்பு வெளிநாட்டு தலைவர்கள் முதலில் டெல்லி, மும்பைக்கு தான் வருவார்கள். இப்போது அவர்கள் பெங்களூருவுக்கு வந்து, பிறகுதான் டெல்லிக்கு செல்கிறார்கள்.

அப்படிப்பட்ட பெருமை பெற்ற பெங்களூருவை மோடி குறை சொல்கிறார். பெங்களூரு மக்கள் என்ன பாவம் செய்தனர்?. நிலக்கரி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது. அதையும் மீறி நாங்கள் மின் உற்பத்தியில் சாதனை படைத்துள்ளோம். தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. வருமான வரித்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது.

அரசியல் சாசன பதவியில் இருப்பவர்கள் நடுநிலையாக நடந்துகொள்ள வேண்டும். எங்கள் கட்சியை சேர்ந்த சிறிய தலைவர்களின் வீடுகளில் கூட வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகிறார்கள். ஆனால் பா.ஜனதாவினரை அந்த துறையினர் கண்டுகொள்ளவில்லை. வருமான வரித்துறையின் நோக்கம் என்ன?. வருமான வரி சோதனையை கண்டு காங்கிரஸ் பயப்படவில்லை.

இவ்வாறு டி.கே.சிவக் குமார் கூறினார். 

Next Story