கல்குவாரி விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக்கோரி சாலை மறியல்


கல்குவாரி விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக்கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 5 May 2018 10:30 PM GMT (Updated: 5 May 2018 7:32 PM GMT)

வாடிப்பட்டி அருகே கல்குவாரி விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக் கோரி கிராமத்தினர் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி அருகே பூச்சம்பட்டியில் உள்ள மதுரையை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் குத்தகை எடுத்த கல்குவாரியில் கடந்த 1-ந்தேதிமேதினத்தன்று மண்ணும், கற்களும் சரிந்து கீழே விழுந்ததில் குலசேகரன்கோட்டை பரமசிவம் (வயது 45), பூச்சம்பட்டியை சேர்ந்த நாகராஜ் (54), கிருஷ்ணன் (45) ஆகிய 3 பேர் இறந்தனர். இதில் பூச்சம்பட்டியை சேர்ந்த சீனிவாசன் (48) என்பவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்தநிலையில் நேற்றுமுன் தினம் அவர் உடல்நிலை மோசமானது. அதனால் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் பலனின்றி இரவு இறந்தார். இதனால் இந்த விபத்தில் சாவு எண்ணிக்கை 4 ஆனது. சீனிவாசனுக்கு மஞ்சுளா என்ற மனைவியும், தாரணி, கோகிலா ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

நேற்று சீனிவாசன் உடல் சொந்த ஊரான பூச்சம்பட்டிக்கு கொண்டு வந்த போது மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டிபட்டி பங்களாவில் கிராம பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டம் செய்தனர். அதில் சீனிவாசன்குடும்பத்தினருக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், குவாரி குத்தகைதாரரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.

தகவலறிந்து வந்த வாடிப்பட்டி தாசில்தார் பார்த்தீபன், சமயநல்லூர் போலீஸ்துணைசூப்பிரண்டு மோகன்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா, வருவாய் ஆய்வாளர் தர்மலிங்கம், கிராம நிர்வாக அதிகாரி முத்துராமலிங்கம் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் சாலை மறியல் போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story