36 பஞ்சாயத்துகளில் கிராம சுயாட்சி இயக்க திட்ட பணிகள் முழுமை பெற்றதை உறுதி செய்ய வேண்டும், மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை


36 பஞ்சாயத்துகளில் கிராம சுயாட்சி இயக்க திட்ட பணிகள் முழுமை பெற்றதை உறுதி செய்ய வேண்டும், மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 5 May 2018 10:00 PM GMT (Updated: 5 May 2018 7:50 PM GMT)

மாவட்டத்தில் 75 சதவீதம் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் 36 கிராம பஞ்சாயத்துகளில் மத்திய அரசு அறிவுறுத்தியபடி கிராம சுயாட்சி இயக்க திட்டப்பணிகள் முழுமை பெற்றதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

மத்திய அரசு நாடு முழுவதும் 75 சதவீத ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் கிராம பஞ்சாயத்துகளுக்கு மத்திய அரசின் திட்டப்பணிகள் சென்றடைந்துள்ளதா என ஆய்வு செய்ய மத்திய மந்திரிகளை அனுப்பி வைத்தது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள 36 கிராம பாஞ்சாயத்துகளில் 6 வகையான திட்டங்கள் சென்றடைந்துள்ளதா என்பதை உறுதிசெய்ய மத்தியமந்திரி நிர்மலா சீதாராமன் விருதுநகர் மாவட்டம் வந்தார்.

இந்த 36 கிராம பஞ்சாயத்துகளிலும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துதல் போன்ற திட்டப்பணிகள் 5-ந் தேதிக்குள் (நேற்று) முழுமையாக அமல்படுத்தப்பட்டிருப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது.

இந்த நிலையில் மத்திய மந்திரி நிர்மலாசீதாராமன் ஆய்வுக்காக சென்ற மருளூத்து, கோட்டநத்தம் ஆகிய 2 கிராமங்களில் மட்டும் அதிகாரிகள் ஒருவார காலமாக முகாமிட்டு மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுத்தனர். இதனால் கிராமங்களுக்கு சென்ற மத்திய மந்திரி நிர்மலாசீதாராமன் இந்த கிராமங்களில் மத்திய அரசின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதைக் கண்டு திருப்தி தெரிவித்துச் சென்றார்.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் 34 கிராமங்களில் எரிவாயு இணைப்பு இல்லாத அனைத்து தகுதியுள்ள குடும்பத்திற்கும் எரிவாயு வழங்கும் திட்டத்தின் மூலம் 97 சதவீதமும், மின் இணைப்பு இல்லாத கிராமப்புற வீடுகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 100 சதவீதமும், கிராமப்புறங்களில் வசிக்கும் 50 சதவீத மானிய விலையில் தலா 10 எல்இடி விளக்குகள் வழங்கும் திட்டத்தின் மூலம் 68 சதவீதமும், இருப்புத்தொகை இல்லாமல் புதிய வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டத்தின் கீழ் 97 சதவீதமும், ஆண்டுக்கு ரூ.330 செலுத்தி ரூ.2 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 88 சதவிதமும், ஆண்டுக்கு ரூ.12 செலுத்தி ரூ.2 லட்சத்திற்கான விபத்து காப்பீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 93 சதவீதமும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் பணியில் 100 சதவீதமும் இலக்கீடு நிறைவேற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5-ந் தேதிக்குள் மீதமுள்ள திட்டப்பணிகளும் முடிக்கப்பட்டு விடும் என உறுதி அளித்தது.


குறிப்பிட்ட காலம் நிறைவடைந்து விட்டதால் மாவட்ட நிர்வாகம் மத்திய அரசு அறிவுறுத்தியபடி மாவட்டத்திலுள்ள 36 பஞ்சாயத்துகளிலும் கிராம சுயாட்சி இயக்க திட்டப்பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் பிரச்சினைஇருந்தாலும் அவற்றுக்கு உடனடி தீர்வு கண்டு இத்திட்டப்பணிகள் முழுமைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

Next Story