349 மாணவ-மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுதுகிறார்கள்


349 மாணவ-மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுதுகிறார்கள்
x
தினத்தந்தி 5 May 2018 11:00 PM GMT (Updated: 5 May 2018 8:16 PM GMT)

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 349 மாணவ-மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுதுகிறார்கள்.

ஈரோடு

இந்தியா முழுவதும் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. சி.பி.எஸ்.இ. (மத்திய இடை நிலை கல்வி வாரியம்) நடத்தும் இந்த தேர்வை நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

இதற்காக தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, நாமக்கல், சேலம், வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 10 நகரங்களில் ‘நீட்’ தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 349 மாணவ -மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுதுகிறார்கள். இதில் தாளவாடியை சேர்ந்த ஷீபா, ஹர்ஷீதா, பரத், சஞ்சய் ஆகிய மாணவ -மாணவிகள் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மைசூர், பெங்களூருவில் அமைக்கப்பட்டு உள்ள ‘நீட்’ தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகிறார்கள். மற்ற மாணவ-மாணவிகள் நாமக்கல், கோவையில் அமைக்கப்பட்டு உள்ள தேர்வு மையங்களில் ‘நீட்’ தேர்வு எழுதுகிறார்கள்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி கூறும்போது, ‘ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 349 மாணவ-மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுதுகிறார்கள். இதில் தாளவாடி பகுதியை சேர்ந்த 4 மாணவ-மாணவிகள் கர்நாடகா மாநிலத்துக்கு சென்று தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்கான பயண உதவித்தொகை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவ -மாணவிகளின் வீடுகளுக்கு பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று தலா ரூ.2 ஆயிரம் வழங்கினர்’ என்றார்.

Next Story