அம்மாபாளையத்தில் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


அம்மாபாளையத்தில் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 May 2018 10:45 PM GMT (Updated: 5 May 2018 8:18 PM GMT)

அம்மாபாளையத்தில் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனால் பல இடங்களில் பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். 2-ம் கட்ட குடிநீர் திட்டத்தில் பிரதான குழாய்கள் அமைக்கப்பட்டு திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அனுப்பர்பாளையம் அருகே உள்ள அம்மாபாளையத்தில் திருப்பூர் சிட்டி கிளப் முன்பு 2-ம் கட்ட குடிநீர் திட்ட பிரதான குடிநீர் குழாயில் நேற்றுமாலை உடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அந்த குழாய் வழியாக அதிகளவில் குடிநீர் வெளியேறி அருகில் உள்ள சாக்கடையில் கலந்து வீணாகிக்கொண்டிருந்தது.

இதனை பார்த்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். உடனே குடிநீர் குழாயை சீரமைக்கக்கோரி திருப்பூர் சிட்டி கிளப் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு 15 வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அதிகாரிகள் சீரமைப்பதாக உறுதியளித்த பின்னர் தான் கலைந்து செல்வோம் என பொதுமக்கள் கூறினர். உடனே போலீசார் மாநகராட்சி அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு இது தொடர்பாக தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து குடிநீர் குழாயை சீரமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை போலீசார் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story