சூறைக்காற்றுடன் மழை; கரும்பு பயிர்கள் சாய்ந்தது விவசாயிகள் கவலை


சூறைக்காற்றுடன் மழை; கரும்பு பயிர்கள் சாய்ந்தது விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 5 May 2018 11:00 PM GMT (Updated: 5 May 2018 9:11 PM GMT)

மொரப்பூர் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் கரும்பு பயிர்கள் சாய்ந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

மொரப்பூர்,

தருர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மொரப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் மொரப்பூர், தாசிரஹள்ளி, எம்.வேட்ரப்பட்டி, செட்ரப்பட்டி, சென்னம்பட்டி, வேப்பசென்னம்பட்டி, ஜடையம்பட்டி, ஆர்.கோபிநாதம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கரும்பு பயிர்கள் சாய்ந்தது.

தொடர் மழை மற்றும் சூறைக்காற்றில், பல ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த கரும்பு தோட்டங்களில் இருந்த கரும்பு பயிர்கள் சாய்ந்து கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சூறைக்காற்றில் கீழே விழுந்த கரும்புக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழல் இருப்பதால், முன்கூட்டியே அறுவடை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

சூறைக்காற்றால் கீழே விழுந்த பயிர்களை எடுத்து நிறுத்த முயன்றால் கரும்புகள் அடி, நடு அல்லது நுனி என ஏதாவது ஒரு பகுதியில் முறிந்து விடுகிறது. சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்த கரும்புகளின் சர்க்கரை திறன் குறைந்து விடும். சூறைக்காற்றுக்கு கரும்பு சாய்ந்ததால் எடை 50 சதவீதம் குறையவும், விலை குறையவும் வாய்ப்பு உள்ளது. இதனால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது என்று கரும்பு விவசாயிகள் மிகுந்த கவலையுடன் தெரிவித்தனர். 

Next Story