மாணவர்கள் மாறி வரும் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்


மாணவர்கள் மாறி வரும் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 5 May 2018 10:48 PM GMT (Updated: 5 May 2018 10:48 PM GMT)

மாணவர்கள் மாறி வரும் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா கூறினார்.

வேலூர்,

வேலூர் மாவட்ட மைய நூலகத்தில் கோடை முகாம் தொடக்க விழா, குரூப்-2 இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா மற்றும் உலக நூலக தினத்தையொட்டி நடந்த கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நேற்று நடந்தது. மாவட்ட நூலக அலுவலர் ஆனந்தன் தலைமை தாங்கினார். ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியர் அரிவர்த்தனபாண்டியன், நீதித்துறையை சேர்ந்த முனீர்பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்நிலை நூலகர் பழனி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா கலந்து கொண்டு கோடை முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:-

நல்ல பதவியை அடைய வேண்டுமென்றால், அதற்கு ஏற்றார்போல் உழைக்க வேண்டும். சினிமா, டி.வி., செல்போன் போன்றவற்றை ஒதுக்கிவிட்டு நூலகத்துக்கு வருவோர் நிச்சயம் போட்டி தேர்வுகளில் வெற்றி அடைவார்கள். நூலகம் குறித்த விழிப்புணர்வு மாணவர்கள் இடையே குறைந்து வருகிறது. மாணவர்கள் தினமும் 4 செய்தித்தாள்களை கட்டாயம் படிக்க வேண்டும். போட்டி தேர்வுகளுக்கு திட்டமிட்டு ஓராண்டு முழுவதும் படித்தால் எந்த பதவியையும் அடைய முடியும்.

மாணவர்கள் நேரத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாணவர்கள் நல்ல புத்தகங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். மாறிவரும் சூழலுக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். கல்வி கற்றால் இந்த சமுதாயத்தை பற்றிய பார்வை மாறும். அதேபோல் பெண் பிள்ளைகள் கல்வி கற்றால் அவர்களின் ஒட்டுமொத்த சந்ததியும் வளர்ச்சி அடையும். பெண் குழந்தைகள் சுயமாக செயல்படவும், நல்லவை, தீயவற்றை அறிந்து கொள்ளவும் பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து உலக நூலக தினத்தையொட்டி 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த பிரியா, கபிலன், யமுனா மற்றும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்த ஜனனி, ஹரிஸ்ரீ, கவுசல்யா உள்பட 25-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் அதிகமான உறுப்பினர்களை சேர்ந்த நூலகர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டன.

முடிவில் மாவட்ட மைய நூலகர் ரவி நன்றி கூறினார்.

Next Story