பழங்குடியின குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன?


பழங்குடியின குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன?
x
தினத்தந்தி 5 May 2018 11:28 PM GMT (Updated: 5 May 2018 11:28 PM GMT)

மராட்டியத்தில் பழங்குடியின குழந்தைகள் பற்றி மாநில அரசு போதிய கவனம் செலுத்துவது இல்லை என சமூக ஆர்வலர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

மும்பை,

மராட்டியத்தில் பழங்குடியின குழந்தைகள் அதிகளவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இவர்களது கல்வி மற்றும் உடல்நலம் குறித்து மாநில அரசு போதிய கவனம் செலுத்துவது இல்லை எனவும் குற்றம்சாட்டி மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் மும்பை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்தவழக்கு நீதிபதிகள் நரேஷ் பாட்டீல் மற்றும் குல்கர்னி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் சுமார் 300 பழங்குடியின குழந்தைகள் உயிரிழந்து இருப்பதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பழங்குடியின குழந்தைகள் இடையே ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்க மாநில அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது தொடர்பான விவரங்கள் அடங்கிய பட்டியலை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தனர். மேலும் பழங்குடியினர் அதிகளவில் வசிக்கும் மேல்காட் மற்றும் நந்துர்பர் ஆகிய பகுதிகளில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், டாக்டர்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Next Story