அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு பணி


அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு பணி
x

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி செல்லா, இடைநின்ற, மாற்றுத்திறனாளி குழந்தைகள் கணக்கெடுப்பு பணி முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமையில் நடந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை, நாயுடு தெரு ஆகிய குடியிருப்பு பகுதியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கணக்கெடுப்பு பணி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி. மகேஸ்வரி தலைமையில் நேற்று நடந்தது.

இந்த ஆய்வின் போது 6 முதல் 14 வயதிற்கு உட்பட்ட 4 மாணவர்களும், 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட 16 மாணவர்களும் என மொத்தம் 20 பேர் கண்டறியப்பட்டு அவர்களை அரசுப்பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டது. அத்துடன் இந்த ஆய்வின் போது, 6 முதல் 18 வயது வரையுள்ளவர்களை பள்ளிக்கு செல்லாமல், குழந்தை தொழிலாளர்களாக செல்ல காரணமாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்.

18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறன் மாணவர்களை பகல் நேர பராமரிப்பு மையம், தொடக்க நிலை ஆரம்ப பயிற்சி நிலையம் ஆகியவற்றில் சேர்த்திட உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெற்றோரை இழந்த ஆதரவற்ற ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகள், பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளுக்கு தொண்டு நிறுவனம் மூலமாக விடுதி ஏற்படுத்தி, தொடர்ந்து கல்வி படிக்க நடவடிக்கை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது, வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) கோதண்டபாணி, உதவி திட்ட அலுவலர் நாராயணா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், அப்துல்சத்தார், ராஜா, கணினி விவர பதிவாளர் ராமு, அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயன், சுகுமார் மற்றும் பலர் உடனிருந்தனர். இந்த ஆய்விற்கான ஏற்பாடுகளை பள்ளி செல்லா மற்றும் மாற்றுத்திறன் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் குமரன், ஆர்த்தி ஆகியோர் செய்திருந்தனர். 

Next Story