திருப்பயத்தங்குடி- காரையூர் சாலையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


திருப்பயத்தங்குடி- காரையூர் சாலையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 11 May 2018 6:38 AM GMT (Updated: 11 May 2018 6:38 AM GMT)

குண்டும், குழியுமாக காணப்படும் திருப்பயத்தங்குடி - காரையூர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி - காரையூர் வரை செல்லும் சாலை சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ளது. இந்த சாலை வாழ்குடி, விற்குடி, காரையூர் மற்றும் கங்களாஞ்சேரி வழியாக திருவாரூர் செல்கிறது. இந்த வழித்தடத்தில் 2 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இந்த பகுதியில் திருப்பயத்தங்குடி, பில்லாளி, தென்னமரக்குடி, வீரபோகம், காமராஜபுரம், வாழ்குடி, விற்குடி உள்பட சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக இந்த சாலையின் வழியாக கங்களாஞ்சேரி சென்று அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த சாலையின் வழியாகத்தான் திருவாரூர் சென்று வருகின்றனர். இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

மேலும், சாலையில் போடப்பட்டுள்ள ஜல்லி கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலையின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். குறிப்பாக இந்த சாலையில் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்களால் சறுக்கி கீழே விழுந்து விபத்துகளும் ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியவில்லை.

அதேபோல் விவசாயிகள் விதைகள், உரங்களை சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் எடுத்து செல்லும்போதும், உடல்நிலை சரியில்லாதவர்களை அழைத்து செல்லும்போதும் தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு முன்பு குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story