தம்பி மனைவியை கொன்ற விவசாயி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்


தம்பி மனைவியை கொன்ற விவசாயி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 11 May 2018 7:10 AM GMT (Updated: 11 May 2018 7:10 AM GMT)

எனது ஆசைக்கு இணங்க மறுத்ததுடன் கணவரிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டியதால் தீர்த்துக்கட்டினேன் என்று தம்பி மனைவியை கொன்று கைதான விவசாயி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள மேலாளவந்தசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் ராஜசேகர். இவர் சிங்கப்பூரில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், கோட்டூர் அருகே வடக்கு நாணலூர் கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி மகள் எஸ்தருக்கும் (வயது 25) திருமணமாகி 3 ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு 2 வயதில் சர்வன் என்கிற ஆண் குழந்தை உள்ளது.

கணவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்ததால் தனது குழந்தையுடன் எஸ்தர் தனியாக வசித்து வந்தார். கடந்த 6-ந் தேதி இரவு 7 மணியில் இருந்து திடீரென்று வீட்டில் இருந்த எஸ்தரை காணவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த எஸ்தரின் குடும்பத்தினர் ஜோசப் ராஜசேகரின் அண்ணன் நெல்சனிடம் கேட்டதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து சிங்கப்பூரில் இருந்த ஜோசப் ராஜசேகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் ஊருக்கு திரும்பி வந்து தேவங்குடி போலீசில் தனது மனைவியை காணவில்லை என புகார் கொடுத்தார்.

அதன் பேரில் நீடாமங்கலம் இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஜோசப்ராஜசேகரின் அண்ணன் விவசாயி நெல்சனின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் நெல்சன், எஸ்தரை தான் கொலை செய்து வேளாங்கண்ணி கடலில் உடலை வீசியதாக முதலில் தெரிவித்தார். அங்கு அவரை அழைத்துச்சென்று போலீசார் எஸ்தரின் உடலை தேடினர். அங்கு உடல் கிடைக்கவில்லை.

அப்போது அவர் போலீசாரிடம் பரபரப்பு தகவலை தெரிவித்தார். அதில், எஸ்தரை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி இரண்டு சாக்குமூட்டைகளில் கட்டி மேலாளவந்தசேரி கிராமம் அருகே உள்ள காரிச்சாங்குடி பகுதியில் ஆற்றுப்பகுதியில் நாணல் புதரில் வீசியதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நெல்சனை அங்கு அழைத்து சென்ற போலீசார், புதர் பகுதியில் 2 சாக்கு மூட்டைகளில் இருந்த எஸ்தரின் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசினர் மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தேவங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல்சனிடம் மேலும் விசாரணை நடத்தினர். அப்போது தனது நண்பர் சகாயராஜூடன் சேர்ந்து எஸ்தரை கொன்றதாக கூறினார். இதனைத்தொடர்ந்து நெல்சன், சகாயராஜ் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான நெல்சன் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது தம்பி ஜோசப்ராஜசேகர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் அவரது மனைவி எஸ்தர் மற்றும் குழந்தை ஆகியோர் எனது தந்தை வீட்டில் வசித்து வந்தனர். எனது தந்தை மோசஸ் இறந்து விடவே, தாயார் நட்சத்திரமேரியின் பாதுகாப்பில் எஸ்தரும், அவருடைய குழந்தையும் இருந்தனர்.

எனது தந்தை இறந்த பின்பு என் தம்பி என்னிடம், இனிமேல் நீதான் தந்தை போல் எனது மனைவி மற்றும் குழந்தைக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என என்னிடம் கூறி விட்டு வெளிநாடு சென்றான். ஆனால் அதற்கு மாறாக எஸ்தர் மீது எனக்கு காமம் ஏற்பட்டது. வீட்டில் எஸ்தர் தனியாக இருக்கும்போது நான் அடிக்கடி அவரிடம் சென்று பேசுவேன்.

தொடக்கத்தில் எஸ்தர் அதனை தவறாக எடுத்து கொள்ளவில்லை. நாளடைவில் எனது பேச்சு மற்றும் நடவடிக்கையில் மாற்றத்தைக்கண்ட எஸ்தர், என்னை திட்டினார். எஸ்தர், அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டு இருப்பார். யார், யாரிடமோ போனில் பேசும் எஸ்தர், என்னிடம் பேச மறுக்கிறாளே என எனக்கு எஸ்தர் மீது ஆத்திரம் இருந்து வந்தது.

கடந்த 5-ந் தேதி எனது மனைவி, குழந்தையை வேளாங்கண்ணியில் உள்ள எனது மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்தேன். மறுநாள் 6-ந் தேதி எனது அம்மா நட்சத்திர மேரியை வயலுக்கு அனுப்பி வைத்தேன். அப்போது வீட்டில் தனியாக இருந்த எஸ்தரிடம் சென்று எனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினேன்.

அதற்கு எஸ்தர் மறுப்பு தெரிவித்ததுடன் இதை தனது கணவருக்கு போன் செய்து சொல்லி விடுவேன் என்றார். இதனால் எஸ்தர் மீது எனக்கு மிகுந்த ஆத்திரம் ஏற்பட்டது.

எனது ஆசைக்கு இணங்க மறுத்ததுடன் இந்த விசயத்தை எனது தம்பியிடம் சொல்லி விடுவாரோ என்று எண்ணி எஸ்தரை தீர்த்துக் கட்டுவது என்று முடிவு செய்தேன். இந்த விசயத்தை அதே ஊரை சேர்ந்த எனது கூட்டாளியான சகாயராஜை எனது வீட்டுக்கு வரவழைத்து எனது திட்டத்தை கூறினேன். எனது திட்டத்திற்கு அவனும் சம்மதம் தெரிவித்தான். இதனைத்தொடர்ந்து இருவரும் கூட்டாக சேர்ந்து எஸ்தரை தீர்த்துக்கட்டும் முடிவுக்கு வந்தோம்.

அன்று மதியம் 2.30 மணியளவில் சாப்பிட்டு விட்டு வீட்டில் எஸ்தர் தனியாக இருந்தார். அவரது குழந்தை சர்வன் வெளியில் விளையாடிக்கொண்டிருந்தான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எஸ்தரின் கதையை முடித்து விடுவது என்று நானும் எனது நண்பர் சகாயராஜூம் அரிவாள் மற்றும் கத்தியுடன் சென்றோம். அப்போது வீட்டுக்கு முன்பு விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை சர்வனை அவனுக்கு பிடித்தமான மொபட்டில் உட்கார வைத்தேன். அவன் வண்டி ஓட்டுவதைப்போல் விளையாடிக் கொண்டிருந்தான்.

பின்னர் நாங்கள் இருவரும் வீட்டிற்குள் நுழைந்தோம். எங்கள் இருவரையும் பார்த்த எஸ்தர் திடுக்கிட்டு சப்தம் போட்டார். உடனே வேகமாக சென்று எஸ்தரின் வாயை நான் பொத்தினேன். சகாயராஜ் கத்தியால் எஸ்தரின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்தம் பீறிட்டு கீழே மயங்கி விழுந்து எஸ்தர் இறந்தார்.

அதனைத்தொடர்ந்து கத்தி மற்றும் அரிவாளால் உடலை இரண்டு துண்டாக்கினோம். 2 கால்களின் முட்டிகளை மட்டும் தனியாக வெட்டினோம். கைகள் இரண்டையும் தனியாக வெட்டினோம். உடல் முழுவதும் ரத்தமாக இருந்ததால் தண்ணீரால் ரத்தத்தை நன்றாக கழுவினோம். பின்னர் வீடு முழுவதும் இருந்த ரத்தக்கறையை தண்ணீரால் கழுவினோம். 2 சாக்கு மூட்டைகளில் எஸ்தரின் உடலை போட்டு கட்டி மொபட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை கீழே இறக்கி விட்டு சாக்கு மூட்டைகளை மொபட்டில் வைத்து அருகில் உள்ள கோரையாற்று புதரில் போட்டு விட்டு வீடு திரும்பினோம். சகாயராஜ் அங்கிருந்து சென்று விட்டார்.

வயலில் இருந்து எனது தாயார் வரும் வரையில் நான் குழந்தையை கொஞ்சி விளையாடுவதுபோல் பாசாங்கு செய்து கொண்டு இருந்தேன். தாயார் வீட்டிற்கு வந்தவுடன் குழந்தையை அவரிடம் கொடுத்தேன். அப்போது எஸ்தர் எங்கே? என எனது தாயார் கேட்டார். சின்ன பிரச்சினை. அவளை அடித்துவிட்டேன். அழுது கொண்டே வீட்டினுள் இருக்கிறாள் என்று சொல்லி விட்டு நான் அங்கிருந்து சென்று விட்டேன்.

அன்று இரவு வரையில் தாயார் தன்னிடம் வராததால் குழந்தை சர்வன் அழுது கொண்டே இருந்துள்ளான். இதனால் சந்தேகம் அடைந்த எனது தாயார் எஸ்தரை வீட்டுக்குள் சென்று தேடினார். எங்கு தேடியும் காணாததால் பின்னர் என்னிடம் எஸ்தர் குறித்து கேட்டபோது நான் எஸ்தரை கொலை செய்து உடலை ஆற்றில் வீசிவிட்டேன் என்றார்.

இவ்வாறு நெல்சன், போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 

Next Story